பிறர் நம்பிக்கைகளை மதித்த பெரியார்.. துடித்துப்போய் மறைமலையடிகளிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?
சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை, சமூக நீதி நாள் என்று அனுசரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
கடவுள் மறுப்பாளராக அறியப்பட்டாலும், கடவுள் பக்தி கொண்டவர்களுடனும் நட்பும், மரியாதையும் வைத்திருந்தவர் பெரியார்.
அதுபோன்ற சில சம்பவங்களைத் தொகுத்து உதயநிதி ஸ்டாலின் பாலோவர்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் இன்றைய தினம் வெளியிட்டு பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பெரியார் நடத்திய இல்லத்தில் கடவுள் வாழ்த்து
பெரியார் ஒரு பிளாஷ் பேக்: தான் நடத்திய ஆதரவற்றோர் இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பெரியாருடன் பேசிக்கொண்டு இருந்தார். 'கடவுள் வாழ்த்து' என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, "உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?" என பெரியாரிடம் கேட்டார்.

நாத்திகத்தை திணிக்கவில்லை
"ஆதரிக்க ஆள் இல்லாத ஆதரவற்ற பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயது வந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி"-எனச் சொன்ன பண்பு, இன்று யாரிடம் இருக்கிறது?

வெளியிட உரிமை
'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு'
- என்பதுதான் பெரியாரின் கொள்கை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.

மறைமலை அடிகளுடனான கருத்து வேறுபாடு
சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்' இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார்.

மன்னிப்பு கேட்ட பெரியார்
ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்' எனத் தலைப்பிட்டு அதை பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக மறைமலையடிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்' எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.
அவரிடம் இந்த சமூகம் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. அதனால்தான் காலங்கள் கடந்தாலும் இந்த சமூகம் அவரை நினைவில் வைத்திருக்கிறது. கொண்டாடுகிறது. தமிழ் சமூகம் நன்றியோடு நினைத்துப்பார்க்கும் ஈரோட்டு வெண்தாடி வேந்தன் பிறந்த தினம் இன்று. இவ்வாறு புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications