"லீக்" ஆன வீடியோ.. பாஜக வண்டவாளம்.. திமுகவை குறை சொன்னீங்க?.. கொஞ்சமாவது யோசியுங்க.. சீறும் சீனியர்ஸ்
திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை தேவை என்கிறார்கள்
சென்னை: திருச்சி சூர்யா விஷயத்தில், அந்த கட்சியை சார்ந்த ஒரு பெண், இழிவான விமர்சனத்துக்கு உள்ளாகிறபோது, அந்த கட்சி நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பது அரசாங்கத்தின் கடமை.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் கொடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா ஆகியோர் இடையே நடந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது
சூர்யா சிவா என சொல்லப்படும் நபர் கூறும் விஷயத்தை காது கொடுத்து கேட்க முடியவில்லை, அவரை கைது செய்ய வேண்டும் என பெரும்பாலானோர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்..
சைதை சாதிக் பேசியதை விட திருச்சி சூர்யா சிவா பேசியது நாராசமாக இருந்ததாக காயத்ரி ரகுராமும் தெரிவித்திருந்த நிலையில், அரசியல் விமர்சகர்களும் இதே கருத்தைதான் வலியுறுத்தி வருகின்றனர்.. அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர்கள் தராசு ஷ்யாம் மணி போன்றோரும், தங்களது டிவி பேட்டிகளில் கொந்தளித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன் சுருக்கம்தான் இது:
யார் அது.. அந்த மூத்த தலைவரா சூர்யா ஆடியோவை
டேப் குரல்
தராசு ஷ்யாம் சொல்லும்போது, "ஆடியோ சம்பவங்கள் என்பது அன்றெல்லாம் அவ்வளவாக கிடையாது.. எப்போதாவது சில சமயம், டேப்பை பதிவு செய்துள்ளோம் என்பார்கள்.. ஆனால், உடனே அதை மறுத்து விடுவார்கள்.. டேப் செய்தாலும், அதை ஒலிபரப்புவதற்கான வசதி என்பது அப்போது கிடையாது.. அந்த ஆடியோவை பொதுமக்களும் கேட்க வழியில்லை.. அதேபோல, அத்தகைய ஆடியோ ஆதாரங்களை, நீதிமன்றங்களும் எடுத்துக் கொள்வதில்லை.. குரலின் உண்மைத்தன்மையை கண்டறிந்துதான் எடுத்துக் கொள்ளும்.. இப்போது ஒரு ஆடியோ ரிக்கார்டிங் என்றால், அடுத்த நிமிடமே லட்சக்கணக்கானோர் கேட்க வசதி வந்துவிட்டது..
சென்ஸார்
அதனால் போனில் பேசுபவர்கள்தான் ஜாக்கிரதையாக பேச வேண்டும்.. இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்தான் பேசியிருக்கிறார்கள்.. ஒருவரையொருவர் திட்டி அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு பேசியிருக்கிறார்கள் என்றால், அது அந்த கட்சியின் வளர்ச்சியில் சிக்கல் என்றே நினைக்கிறேன்.. எல்லாரையுமே கட்சிக்குள் சேர்த்திருக்கிறார்கள்.. பொதுவாக கட்சிக்குள் அரசியல் போட்டிக்காக இப்படி நடப்பது இயல்பு. அடித்துக் கொள்ளும் அளவுக்கு பிரச்சனைகள் செல்வதும் இயல்பு.. ஆனால், திமுக, பாஜக, என யாராக இருந்தாலும்சரி, பொதுவெளியில் கவனத்துடன் பேச வேண்டும்' என்றார்.
நாக்கை அறுப்போம்
மூத்த பத்திரிகையாளர் மணி சொல்லும்போது, "பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நாட்டை ஆளக்கூடிய கட்சியில் இவ்வளவு ஓபனாக நடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.. இவ்வளவுதான் கீழே போக போக முடியுமா? பீப் போடாமலேயே சென்சார் இல்லாமல் அந்த ஆடியோ ஓடுது.. குஷ்புவை தவறாக பேசியபோது, போலீஸ் அனுமதியேயில்லாமல், வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கைதாகி சிறைக்கு போகும்போது, "பெண்களை பற்றி தவறாக பேசினால், நாக்கை இழுத்து வைத்து அறுப்போம்" என்று பாஜக அண்ணாமலை சொன்னாரே, இப்போது குஷ்புவை பேசியதைவிட அவர் கட்சியில் உள்ளவர்களே பல மடங்கு அசிங்கமாக பேசியிருக்கிறார்கள்..
வாய்ப்பூட்டு
அதேசமயம், பாஜகவை மட்டும் குறை சொல்ல முடியாது.. லட்சக்கணக்கானோர் இந்த ஆடியோவை கேட்டும்கூட, எதுவுமே கண்டிக்கவில்லை.. இதுக்கெல்லாம் மக்கள்தான் ஏதாவது ஒரு வகையில் பாடம் புகட்ட வேண்டும். இந்த ஆடியோவை, கட்சி சார்ந்து பார்க்க கூடாது.. சமூகம் இயல்பாக கடந்து போகிறது.. காவல்துறையும் கடந்து போகிறது.. காவல்துறை ஏன் வேடிக்கை பார்க்கிறது? இந்த ஆடியோவில் இருவருமே பாஜகவை சம்பந்தப்பட்டவர்கள் என்றாலும், இருவருமே தங்கள் குரல்களை மறுக்கவில்லை.. ஆடியோவின் உண்மைதன்மையை சோதிப்பது அடுத்தக்கட்டமாக இருந்தாலும், விசாரணையை கூட காவல்துறை செய்யவில்லையே?
லீக் ஆடியோ
இருவருமே அவதூறாக அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்கள்.. ஆனால், சிவா அதிகமாக பேசியிருக்கிறார்.. அத்துடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.. கொலை செய்வோம் என ஒரு ஆடியோ லீக் கசிகிறது என்றாலே, அதுகுறித்து விசாரிக்கக்கூடிய எல்லா உரிமையும் காவல்துறைக்கு உண்டு.. ஒரு கட்சிக்குள் நடக்கும் விஷயமாக அதை பார்க்க முடியாது.. ஒரு பெண்மணி பகிரங்கமாக மிரட்டப்படுகிறார்.. அது என்னன்னு விசாரிக்க வேண்டும்.. இதற்கு யாரும் புகார் தர வேண்டும் என்று அவசியமில்லை..
கேடி ராகவன்
பாஜகவை 98 சதவீத மக்கள் வெறுக்கிறார்கள் என்று இந்தியா டுடேயில் சமீபத்திய கருத்து கணிப்பு சொல்கிறது,, அதேபோல பாஜகவை அதிமுக உட்பட சித்தாந்த ரீதியாக மற்ற கட்சிகளும் எதிர்க்கின்றன என்பதிலும் மாற்று கருத்தில்லை.. இப்படி ஒரு வெறுப்பு அந்த கட்சியிடம், இத்தனை பேருக்கு இருந்தாலும், யாருமே பாஜக தலைவர்களை பற்றி இப்படி அவதூறாகவோ, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ பேசி, வீடியோ, ஆடியோக்களை வெளியிட்டு அரசியல் செய்யவில்லை.. ஆனால் இதை எல்லாம் செய்வது எல்லாம் யார்? ஏற்கனவே கேடி ராகவன் விஷயம் வெளியே வந்தது. யார் அந்த வீடியோவை வெளியிட்டது?
தகிடுதத்தம்
குஷ்பு பாஜகவில் சேர்ந்த சமயம்தான், மதன் ரவிச்சந்திரனும் பாஜகவில் இணைந்தார்.. அதுவும் டெல்லியில் போய் சேர்ந்தார்.. அதன் தொடர்ச்சியாகதானே இந்த ஆடியோவையும் பார்க்க வேண்டும்?.. காசி தமிழ்ச்சங்கம், ஆளுநரின் நடவடிக்கை, பாஜக தமிழகத்தில் வளர கையிலெடுக்கும் தகிடுதத்தம், மதமாற்ற பிரச்சனையை எப்படி கையாளுகிறது, அதிமுகவை எப்படி ஆட்டிப்படைக்கிறது, என இப்படியெல்லாம் பாஜகவின் அரசியலை பேச வேண்டிய நாம், இதெல்லாம் பேசக்கூடிய அளவுக்கு வந்துவிட்டோமே.. இதற்கு என்ன பெயர்? அதேசமயம் இதை கடந்தும் நம்மால் செல்ல முடியவில்லையே.
முடைநாற்றம்
அமித்ஷாவின் 100 சதவீத நம்பிக்கையை பெற்றவர் அண்ணாமலை.. மேலிடத்தின் ஆசீர்வாதம் பெற்றவர்.. மதுரை டூ திண்டுக்கல்லில் பிரதமருடன் காரில் ஒரு மணி நேரம் பயணித்தவர்.. உச்சபட்ச கவுரம் இது.. அப்படி ஒரு அந்தஸ்தில் இருக்கக்கூடிய பிரமுகர் அண்ணாமலை, காய்த்ரியை 6 மாதம் சஸ்பெண்ட் செய்வதும், சூர்யாவுக்கு வாய்ப்பூட்டு போடுவதும் மட்டும் போதுமா? திமுகவை குறை சொல்லிவிட்டு, இன்று உங்க கட்சியிலேயே முடைநாற்றம் அடிக்கிறதே.. காயத்ரியை பதவியில் இருந்து தூக்கியது பற்றி எனக்கு கவலை இல்லை.. அது அவர்கள் கட்சியின் உள்விவகாரம்..
பெருங்கவலை
ஆனால், சிவா விஷயம் அப்படி இல்லை.. ஆயிரம் முரண்பாடுகள் பாஜக மீது இருக்கலாம்.. சித்தாந்த ரீதியில் பாஜகவை எதிர்த்தாலும், திருச்சி சூர்யா விஷயத்தில், அந்த கட்சியை சார்ந்த ஒரு பெண், இழிவான விமர்சனத்துக்கு உள்ளாகிறபோது, ஆணாதிக்க மனப்பான்மையில் பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளாகிறபோது, அந்த கட்சி நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, சட்டப்படியான நடவடிக்கையை எடுப்பது அரசாங்கத்தின் கடமை.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் கொடுப்பது ஒவ்வொரு ஒவ்வொரு குடிமகனின் கடமை.. சம்பந்தப்பட்ட கட்சியும் இதுகுறித்து கொஞ்சமாவது கவலைப்பட வேண்டும்" என்றார்.
உச்சபட்சம்
அண்ணாமலை தலைவராக பதவியேற்றதில் இருந்தே, காயத்ரிக்கும் மாநில தலைமைக்கும் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.. இவர்களுக்குள் சுமூக உறவு இல்லாமலும் இருந்துள்ளது... அதேசமயம், பாஜகவின் உட்கட்சி விவகாரம் பேச எனக்கு துளியும் விருப்பமில்லை.. இந்திய அரசியலில் இருந்தே, அரசு ரீதியாக முழுவதுமாக பாஜக அகற்றப்பட வேண்டும் என்பதை மனப்பூர்வமாக விரும்புகிறேன்.. அதனால், அந்த கட்சி பலவீனமானது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்தான்.. காயத்ரியை நீக்கம் செய்தது குறித்து கருத்து சொல்லவும் விரும்பவில்லை..