13 பேரை கைது செய்தீர்களே.. இந்த வீடியோவை பாருங்க! டிடிஎப் வாசன் கைதாவது எப்போது? நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: சென்னையிலிருந்து திருத்தணி நெடுஞ்சாலையில் கைகளை விட்டுவிட்டு பைக் ஓட்டி வீடியோ வெளியிட்ட யூடியூபர் டிடிஎஃப் வாசனை காவல் துறை எப்போது கைது செய்யும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் கைது செய்துள்ள நிலையில் இவர் மீது எப்போது நடவடிக்கை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.
Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு 2 கே கிட்ஸ்கள் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.
இவர் பைக் ஓட்டும் சாகசங்களை பார்த்து பூரித்து போய் அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார். நெடுஞ்சாலைகளில் கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.

நடிகர் ,நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள்
சினிமா நடிகர், நடிகைகளை போல் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் எங்கு சென்றாலும் அங்கு போக்குவரத்தே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஏராளமானோர் இவரை காண ஆவலாக வருவதுண்டு. அப்படிப்பட்ட இவர் சக யூடியூப் பிரபலங்களுடன் சேர்ந்து வீடியோ போடுவார். இவருக்கு 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர்.

247 கி.மீ. வேகம்
அண்மையில் ஒரு நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் சென்ற வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது வாகனத்தில் அமர்த்தி கொண்டு பிஸியான சாலையில் 140 க்கும் மேற்பட்ட கி.மீ. வேகத்தில் வாசன் சென்றதும், காற்றின் வேகத்தால் ஜி.பி.முத்துவின் வாய் பேசும் போது கோணலாக சென்றதும் வீடியோவில் பதிவானது.

ஜி.பி.முத்துவுடன் பயணம்
இத்தனை வேகத்திலும் ஜிபி முத்துவின் தலையில் ஹெல்மெட்டே இல்லை. கேட்டால், ஜிபி முத்துவின் முக பாவனைகளை ரசிப்பதற்காகவே அவருக்கு ஹெல்மெட் அணிவிக்கவில்லை என வாசன் தெரிவித்திருந்தார். இதனால் வாசன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.

வாசன் வீடியோ
இந்த நிலையிலும் போலீஸை கண்டித்தும் பத்திரிகையாளர்களை கண்டித்தும் வாசன் வீடியோ போட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூரில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த வாசனை பார்க்க இளைஞர்கள் கூட்டமாக கூடினர், தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

டிடிஎஃப் வாசன்
இதைத் தொடர்ந்து டிடிஎப் வாசன் மற்றொரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் என் மேல கை வச்சிருந்தாலும் பொறுத்திருப்பேன், என் பசங்க மேல கை வச்சிட்டாங்க! என் வழக்கு போட்டாலும் பரவாயில்லை என்றெல்லாம் பேசியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தனது தோழியுடன் பைக்கில் சென்ற போது வெளியிட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை- திருத்தணி நெடுஞ்சாலை
தனது தோழியுடன் சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்கிறார் டிடிஎப் வாசன். அப்போது அவர் கைகளை விட்டுவிட்டு பின்னாடி மாட்டியிருக்கும் பைக்கில் இருந்து எதையோ எடுத்து அந்த தோழியிடம் கொடுக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்களும் சமூக ஆர்வலர்களும் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக ஆகி விடும் என்ற எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டிடிஎ-ப் வாசன் கைது எப்போது
அண்மையில் சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதற்காக 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை கைது செய்யும் போலீஸ் ஏன் வாசனை கைது செய்யவில்லை என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கேரளத்தில் தடை செய்தது போல் தமிழகத்தில் ஹெல்மெட்டில் கேமரா வைப்பதை தடை செய்ய வேண்டும் என பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications