"கைமாறுதோ".. 15 சீட் எடப்பாடிக்கு.. 8 பன்னீருக்கு.. காங்கிரஸூக்கு 15 சீட்டா.. இப்பவே கண்ணை கட்டுதே
சென்னை: ஒரு வாரத்துக்குள் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்து முடிப்பதாக, சுப்ரீம்கோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபக்கம் எம்பி தேர்தல் குறித்த கணக்கும் தமிழகத்தில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
அதிமுக வழக்கு குறித்த, பரபரப்பான வாதங்கள் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகின்றனர்.
ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு 2 பேரும், சமாதானம் ஆகாமல் போனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதுதான், இப்போதுவரை சஸ்பென்ஸாக உள்ளது..
ஒரு தடவைனா ஓகே! மீண்டும் மீண்டுமா? டங்க் ஸ்லிப்பான ஓபிஎஸ் வழக்கறிஞர்.. புரியாமல் நின்ற எடப்பாடி டீம்
சஸ்பென்ஸ்
அதேசமயம், நடைபெற உள்ள எம்பி தேர்தல் குறித்த கூட்டணி + சீட் விவகாரங்களும் நடந்து கொண்டுதான் உள்ளன.. ஆனால், எம்பி தேர்தல் என்பதால், இதை பற்றி பெரிதாக எடப்பாடி பழனிசாமிக்கு கவலை இல்லை என்கிறார்கள்.. அந்தவகையில், பாஜகவுக்குதான் இந்த தேர்தலால் மிகப்பெரிய சவாலும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.. எனினும், தான் அமைக்க போகும் மெகா கூட்டணியில், அவர்கள் வந்து இணைந்தால் இணையட்டும், இல்லாவிட்டால் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைக்கட்டும்... தான் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாகவும் எடப்பாடி சொல்லி வருகிறாராம்..
2, 2 மாஜிக்கள்
எனினும் கூட்டணி பேச்சுவார்த்தைகள், திரைமறைவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள்.. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முக்கிய ஆதரவாளர்களான 2 மாஜி அமைச்சர்களிடம், பாஜகவின் 2ம் கட்ட தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறார்கள் என்ற தகவல் ஒன்று வலம்வருகிறது.. அதன்படி, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக இருந்தால் பாஜகவுக்கு 10 தொகுதிகளே போதும் என்கிறார்களாம்.. மற்ற தொகுதிகளில் அதிமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பிரித்து கொள்ளலாம், இல்லாவிட்டால், அதிமுகவுக்கு 15 தொகுதிகள் கொடுக்கப்படும்..
லோட்டஸ் சின்னம்
அவைகளில் எடப்பாடி பழனிச்சாமி டீம் போட்டியிடலாம் என்றும், மிச்சமுள்ள 25 தொகுதிகளில் ஓபிஎஸ் டீமுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படுமாம்.. ஆனால், அந்த அணியினர் தாமரை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவார்கள் என்றும், பாமக, அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டு மிச்சமுள்ள தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடும் என்றும் பிளான் உள்ளதாம். இந்த 2ஆப்ஷன்களுக்குமே எடப்பாடி டீம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடும் அபாயம் முதல், மற்ற சிக்கல்களும் எழ வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்..
எகிறிடுச்சே ரேட்
அதேபோல, திமுக கூட்டணியை பொறுத்தவரை, தமிழக காங்கிரஸ் நிச்சயம் 15 சீட் கேட்கும் என்கிறார்கள்.. 'காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்று அழகிரி சொல்லி வருவது, கூட்டணி ரேட்டை அழகிரி உயர்த்த காரணமாக இருக்கும் என்றாலும், 15 சீட் என்பது திமுக கூட்டணியில் சாத்தியமில்லை என்கிறார்கள்.. அதேசமயம், காங்கிரஸை தவிர்த்துவிட்டு, திமுக தனித்து போட்டியிட்டால், இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதிலும் சிக்கல் உள்ளது.. மேலும், மதச்சார்பற்ற அணி என்பதற்கு தேசிய அளவில் வலு சேர்ப்பதே காங்கிரஸ் என்பதை திமுக மேலிடம் உணராமல் இல்லை..
விஜயகாந்த்
அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் திமுக தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமானால், அது காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைந்து சென்றால் மட்டுமே சாத்தியம் என்பதையும் நாம் அழுத்தமாக சொல்ல வேண்டி உள்ளது.. அந்தவகையில் தமிழக காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்திலேயே சீட் கிடைக்கும் என்றும், ஒருவேளை கமல், விஜயகாந்த், கூட்டணிக்குள் வர நேரும்போது, காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் இருந்தே பிரித்து, மநீம 1 சீட், தேமுதிக 1சீட் என ஒதுக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், கூட்டணி கணக்குகளும் அது தொடர்பான கணிப்புகளும் நித்தம் நித்தம் கசிந்து கொண்டே இருக்கின்றன.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!