முகிலன் எங்கே? உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்.. சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என கேட்டு சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூழலியல் போராளி, சமூக ஆர்வலர், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்டவர்.
தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைகளிலும் போராட்டங்களிலும் முன்னின்று குரல் கொடுத்தவர். கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் இருந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வரை அப்பாவி பொதுமக்களாக போராட்டங்களை முன்னெடுத்தவர்.

காணாமல் போன முகிலன்
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று திரும்புவார் நாளை திரும்பவார் என எதிர்பார்த்த குடும்பத்தினர் அவரது நட்பு வட்டாரத்தின் உதவியுடன் போலீஸில் புகார் அளித்தனர்.

சிபிசிஐடி வசம் வழக்கு
ஆனால் முகிலன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறியது போலீஸ். இந்நிலையில் முகிலன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் சென்றது.

ஏதோ செய்துவிட்டார்கள்
ஆனாலும் முகிலன் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் முகிலனால் எதிர்க்கப்பட்டவர்கள் யாரோ அவரை ஏதோ செய்து விட்டார்கள் என்றும் முகிலன் குடும்பப் பிரச்சனைக்காரணம் தலைமறைவாக உள்ளார் என்றும் செய்திகள் றெக்கை கட்டி பறந்தன.

ட்ரென்ட்டான ஹேஷ்டேக்
முகிலன் மாயமாகி 100 நாட்கள் கடந்து விட்டது. இதுவரை அவர் எங்கேயிருக்கார் என்ற தகவலோ அல்லது அவர் என்ன ஆனார் என்ற தகவலோ கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் Where is Mugilan? என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டானது.

கண்டன ஆர்ப்பாட்டம்
இதைத்தொடர்ந்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

பலர் பங்கேற்பு
இந்நிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தென்னரசு, ஜி ராமகிருஷ்ணன், இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உயிருடன் இருக்கிறாரா?
அப்போது முகிலன் எங்கே? அவர் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல் என அவர்கள் முழக்கமிட்டனர். இப்போராட்டதில் முகிலனின் மனைவி பூங்கொடியும் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications