எந்த உறுப்பினரும் குரல் எழுப்பலாமா? எங்கே அந்த விதியை காட்டுங்க.. கோர்ட்டில் பொங்கிய ஓபிஎஸ் தரப்பு!
சென்னை : எந்த பொதுக்குழு உறுப்பினரும் விவாதம் எழுப்பலாம் என்ற கட்சி விதியை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காட்ட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரியுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

திருத்தம் செய்யக் கூடாது
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. இதனை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்த விதியில் திருத்தம் செய்யக் கூடாது என உத்தரவிடவேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்தது.

பொதுக்குழுவே உச்சபட்ச அமைப்பு
கட்சியின் உச்சபட்ச அமைப்பு பொதுக்குழு. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல. பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும், இது ஜனநாயக நடைமுறை. பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்படலாம், அல்லது செய்யப்படாமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம்; இது நடக்கும்; இது நடக்காது என்ற எந்த உத்தரவாதமும் கொடுக்கமுடியாது என எடப்பாடி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அஜெண்டா இல்லாமல்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், பொதுக்குழு அஜெண்டா இதுவரை வெளியிடப்படவில்லை என்ற வாதத்தை முன்வைத்த நிலையில், அஜெண்டா இல்லாமல்தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது. எனவே பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது. சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது என ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

எந்த உறுப்பினரும்
மேலும், எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, பொதுக்குழு உறுப்பினர்கள் எவரும் குரல் எழுப்பலாம் என்பதே கட்சியின் விதி, ஒவ்வொரு உறுப்பினரும் இதைத்தான் பேசவேண்டும் என முன்கூட்டியே உத்தரவிட முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

விதியை காட்டுங்க
இதையடுத்து, எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் விவாதத்தை எழுப்பலாம் என கட்சி விதியில் எங்கே உள்ளது? அதற்கான விதிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காட்ட வேண்டும் என எதிர் வாதம் வைத்தது. மேலும், ஒரு விவகாரத்தை எழுப்புவது வேறு, எவரும் பேசலாம் என்பது வேறு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications