எங்கே இருக்கிறார் டிடிவி தினகரன்.. சசிகலாவையும் சந்திக்கவில்லை.. "ஜூன் 13க்கு" பிறகு பிளான் 2.0?
சென்னை: பெரும் நம்பிக்கையோடு இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் ரிசல்ட் வெளியான பிறகு பயங்கர அப்செட்.
அவ்வப்போது அவர் டுவிட்டுகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டாலும், ஆக்டிவ் அரசியலில் இருந்து கிட்டத்தட்ட ஒதுங்கியே உள்ளார் டிடிவி தினகரன்.
நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக, அசாதுதின் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி, எஸ்டிபிஐ ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து களமிறங்கியது அமமுக.

கோவில்பட்டி தொகுதி
இந்த தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார் தினகரன். இந்த தொகுதி உட்பட குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பது டிடிவி நம்பிக்கையாக இருந்தது. சசிகலாவிடமும் இதை உறுதியாகச் சொல்லியுள்ளார் தினகரன். இதனால் அதிமுக 40க்கும் குறைவான தொகுதிகளில்தான் வெல்லும். அந்த அளவுக்கு ஓட்டுக்களை பிரிக்கப்போகிறோம் என்பதுதான் டிடிவி பிளானாக இருந்துள்ளது.

டிடிவி தினகரன் தோல்வி
அதேநேரம், ஒரு தொகுதியில் கூட அமமுக வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா இருந்தபோதே, கடந்த முறை கோவில்பட்டி தொகுதியில், குறைந்த வாக்குகளில்தான் வெற்றி பெற்றார் கடம்பூர் ராஜு. ஆனால், இந்த முறை தினகரனை ஈஸியாக தோற்கடித்துவிட்டார்.

ஆக்டிவ் அரசியல்
இந்த தோல்விகள் கொடுத்த அப்செட்டால்தான் டிடிவி தினகரன் இப்போது ஆக்டிவ் அரசியல் செய்யாமல் இருக்கிறார். தோல்விகளுக்கு கலங்குபவர் இல்லைதான் டிடிவி. ஆனாலும் ஏன் ஒதுங்கியே இருக்கிறார், எங்கே இருக்கிறார் என்று அமமுக வட்டாரத்தில் விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.

புதுச்சேரி பண்ணை வீடு
டிடிவி தினகரனுக்கு புதுச்சேரியில் பண்ணை வீடு உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அவர் அங்கேதான் தங்கியுள்ளார். அறிக்கைகள் அங்கேயிருந்துதான் வருகின்றன. தினகரன் இங்கேயே ஓய்வெடுக்க முக்கிய காரணம், சசிகலா தினகரனை இன்னும் சந்திக்கவில்லை என்பதுதான். சசிகலா தினகரனுக்கு ஆதரவாக இருந்தால் அவரும் வீறு கொண்டு எழுவார். இதுவரை சசிகலா தினகரனை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்கிறார்கள்.

சசிகலா பிளான்
தினகரன் சொன்னபடி வெற்றியை பெற முடியவில்லை என்பதால் சசிகலாவும் அப்செட்டில்தான் இருக்கிறாராம். ஆனால் எடப்பாடி - ஓபிஎஸ் இடையேயான விரிசலை பயன்படுத்தி அரசியலுக்கு ரீ என்ட்ரி கொடுக்க சசிகலா திட்டமிட்டுள்ளார். எனவே இப்போதைக்கு தினகரனை சந்திப்பதை தவிர்க்கிறாராம். தினகரனால்தான் வாக்குகள் பிரிந்து அதிமுக வெற்றி வாய்ப்பு பறிபோனது என்பதால் அதிமுக நிர்வாகிகள் கோபத்தில் இருப்பார்கள் என்பதால் இப்போதைக்கு தினகரனை சந்திக்காமல் ரீ என்ட்ரி கொடுப்பதுதான் சசிகலா பிளான் என்கிறார்கள்.

தினகரன் மகள் திருமண ஏற்பாடு
அதேநேரம் தினகரன், தனது மகள் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளதும், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க காரணம் என்கிறார்கள். பூண்டி துளசி வாண்டையாரின் பேரனுக்கும் டி.டி.வி.தினகரனின் மகளுக்கும் திருவண்ணாமலையில் வரும் ஜூன் 13ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. எளிமையான வகையில் இந்த திருமணம் நடைபெறும். பூண்டியில் ஜூன் 23ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருமணத்தில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வத்திற்கும், டெல்லியைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகு, தினகரன் 2.0 அரசியல் ஆட்டம் ஆரம்பம் ஆகும் என்கிறார்கள். இந்த திருமணத்திற்கு வரும் விஐபிகளை பார்த்தாலே அதை புரிந்து கொள்ள முடியுமாம்.












Click it and Unblock the Notifications