3 பேருதான்.. அவங்களும் எந்தக் கட்சிக்கு போறாங்கனு தெரியல - ஓபிஎஸ்ஸை கிண்டல் செய்த சி.வி.சண்முகம்!
சென்னை : ஓ.பி.எஸ் பக்கம் இருப்பவர்களே 3 எம்.எல்.ஏக்கள்தான். ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் என 3 எம்.எல்.ஏக்கள் தான் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
மேலும், இந்த மூன்று எம்.எல்.ஏக்களில் யார் யார் எந்தக் கட்சிக்கு போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கிண்டல் செய்துள்ளார் சி.வி.சண்முகம்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாகவும், ஓபிஎஸ்ஸுக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவே இல்லை என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சிவி சண்முகம்
ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுகவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் செல்லும் எனத் தெரிவித்தார்.

ஒப்புதல் பெறவில்லை
மேலும் பேசிய சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், 2021 டிசம்பர் 2ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே அவர்களது பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது. அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படாததால் அவர்களது பதவிகள் காலாவதியாகிவிட்டன எனத் தெரிவித்துள்ளார்.

காலாவதி ஆகிவிட்டது
அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் தற்போது இல்லை. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் காலாவதி ஆகிவிட்டன. இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி அ.தி.மு.க பொருளாளர் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக மட்டுமே உள்ளார். வைத்திலிங்கம் மாவட்ட செயலாளராக மட்டுமே உள்ளார் என்றும் சி.வி.சண்முகம் தடாலடியாகப் பேசினார்.

அழிக்க நினைத்தவர் ஓபிஎஸ்
மேலும் பேசிய அவர், "அதிமுகவை அழிக்க நினைத்தவர் ஓபிஎஸ். கட்சியை பிளவுபடுத்தியவர், இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம். பொது மன்னிப்பு கேட்டு கட்சிக்குள் வந்தவர் அவர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெறும் 40 பொதுக்குழு உறுப்பினர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். அவர்களும் இந்நேரம் எடப்பாடி பக்கம் வந்திருப்பார்கள்.

எந்த கட்சிக்கு போவார்களோ
தோற்றவர்கள், விரக்தியின் விளிம்பில் இருப்பவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். அந்தப் பக்கம் இருப்பவர்களே 3 எம்.எல்.ஏக்கள்தான். ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் என 3 எம்.எல்.ஏக்கள் தான் உள்ளனர். இந்த மூன்று பேரில் யார் யார் எந்தக் கட்சிக்கு போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை." எனப் பேசியுள்ளார். ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுவார்கள் என சி.வி.சண்முகம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications