வேலுமணி மீது வழக்கு போட்டவர்.. உளவுத்துறை ஏடிஜிபியான டேவிட்சன் தேவாசீர்வாதம்.. அதிரடி பின்னணி!
சென்னை: முத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்து, பார்த்து பார்த்து முத்து மாலை உருவாக்குவதை போல, அதிகாரிகள் டீமை வடிவமைத்து வருகிறார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தலைமைச் செயலாளராக இறையன்பு, முதல்வரின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் என, நேர்மையான அதிகாரிகளை தேர்ந்தெடுத்து, முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார் ஸ்டாலின்.
'வங்கத்தில் ஆட்சியை பிடிக்க.. பாஜக ஒட்டுமொத்த இந்தியாவையே கிட்டதட்ட அழித்துவிட்டது'.. மம்தா சாடல்
அந்த வகையில், உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக, தூத்துக்குடி மாவட்ட "சிங்கம்" என வர்ணிக்கப்படும் டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பொறுப்பான பதவி
உளவுத்துறை கூடுதல் டிஜிபி என்பது சட்டம்-ஒழுங்கை காப்பதில், மாநிலத்தின் மிக முக்கிய பணியாகும். இப்படி ஒரு பொறுப்புள்ள, உளவுத்துறை கூடுதல் டிஜிபி பதவிக்குதான் டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில ஆட்சிக்கு எதிராக நடைபெறும் விஷயங்கள் பற்றிய தகவல்களை, ஆளும் அரசுக்கு அறிக்கையாக அளித்து தலைநிமிரச் செய்ய வைக்கும் மிக முக்கிய துறை இதுவாகும். முதல்வரை தினமும் சந்தித்து, முக்கிய தகவல்களை தெரிவிக்க வேண்டிய பொறுப்புள்ள பதவி இது. அந்த வகையில் உளவு சார்ந்த பணிகளில் அதிக அனுபவம் வாய்ந்தவரான டேவிட்சன் தேவாசீர்வாதத்தை கூடுதல் டிஜிபியாக நியமித்துள்ளது தமிழக அரசு.
தூத்துக்குடி மாவட்டம்
1995ம் ஆண்டு, ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்த்தார் டேவிட்சன் தேவாசீர்வாதம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள, முதலூர் (மஸ்கோத் அல்வாவிற்கு பெயர் பெற்ற ஊர்) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் டேவிட்சன் தேவாசீர்வாதம். எம்ஏ பட்டதாரி.
ஆரம்பமே அதிரடி
காவல்துறையில் இணைந்ததும், முதல் பணியாக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஏஎஸ்பியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், இதன் பின்னர் கோவை ஏஎஸ்பியாக பணியாற்றினார். அதனை எடுத்து எஸ்பியாக பதவி உயர்வு பெற்று, கடலூர், கரூர், காஞ்சிபுரம் மற்றும் க்யூ பிரிவு எஸ்பி ஆகவும் பணிபுரிந்துள்ளார்.
பல பணிகள்
பால்ரஸ் குண்டுவெடிப்பு, தூத்துக்குடி மாவட்ட கண்ணிவெடி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை சிறப்பாக கையாண்டு அதற்காக பாராட்டுகளைப் பெற்றவர் டேவிட்சன் தேவாசீர்வாதம். அதன் பிறகு பதவி உயர்ந்து காவல்துறை நிர்வாக பிரிவு மற்றும் உளவுத் துறையில் பணியாற்றினார். மேலும் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் நியமனம் செய்யப்பட்டார். தற்போது கோவை மாநகர காவல் ஆணையராக உள்ளார் டேவிட்சன் தேவாசீர்வாதம்.
வேலுமணி மீது வழக்கு
சென்னையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தேர்தலையொட்டி ஒன்றரை மாதங்கள் முன்பு கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அப்போது பல அதிரடிகளை நிகழ்த்தினார். அப்போதைய அதிமுக அரசில் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்த அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தேர்தல் விதிமீறியதற்காக, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிய வைத்து அதிரடி காட்டினார் டேவிட்சன் தேவாசீர்வாதம்.
காவல்துறையில் சீரமைப்பு
பணவசூலில் ஈடுபட்டு வந்த 7 காவல் நிலைய உளவு போலீசாரை பணியிடம் மாற்றினார். கோவை மாநகர காவல்துறையில் இருந்த காவல் நிலைய உளவுக்காவலர் பிரிவை கலைத்தே விட்டார். ஹோட்டலை மூட வலியுறுத்தி, வாடிக்கையாளர்கள், ஊழியர்களை லத்தியால் தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, அவர் மீது விசாரணைக் குழுவை அமைத்தார். இப்படியான தென்னாட்டு சிங்கம் என வர்ணிக்கப்படும் டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தனது பக்கத்திலேயே கொண்டு வந்துவிட்டார் ஸ்டாலின்.