என்னாது.. ரஜினியோட அண்ணனுக்கு முதல்வர் பதவியா.. பேசாம தமிழருவியாரை ஆக்கலாமே.. டிஸ்கஷனில் ரசிகர்கள்!
சென்னை: ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தான் இருக்க மாட்டேன் என ரஜினி கூறியதை அடுத்து அந்த பதவிக்கு யார் பொருத்தமானவர் என்பது குறித்து தற்போது பெரிய விவாதமே நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video
ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்ற குழப்பம் போய் அவரது கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 3 முறையாக கடந்த வாரம் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை ரஜினி சந்தித்தார்.
அப்போது அவர்களுடன் கட்சி தொடக்கம், மாநாடு நடத்துவது, கட்சிக் கொடி அறிமுகம், கட்சிக் கொடியை கட்சி அறிவிக்கும் போதே அறிவிப்பதா இல்லை வேறு நாள் அறிவிப்பதா போன்ற விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை ரஜினி நடத்தியதாக தெரிகிறது.

ரஜினி தலைவர்
இதன் மூலம் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதியாகிவிட்டது. மேலும் அந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் தனக்கு பதவி, புகழ், பணம் இவையெல்லாம் தேவையில்லை என்றும் தன்னால் கட்சித் தலைவராக மட்டுமே இருக்க முடியுமே தவிர முதல்வர் வேட்பாளராக இருக்க முடியாது என்றும் ரஜினி கூறியதாக தெரிகிறது.

மனதில்
இதற்கு மாவட்டச் செயலாளர்கள் ஒப்புக் கொள்ளாததும் அவர்கள் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டதாக இதைத்தான் ரஜினி தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் என பேட்டி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினி யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முற்பட்டிருப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

ரஜினிக்கு பாடம்
ரஜினியை பொருத்தவரை அரசியலுக்கு வருவதற்கு காரணமே அவர் சொன்னது போல் பணத்தாசையோ பதவியாசையோ புகழுக்காகவோ அல்ல. மக்களுக்கு நியாயமான , நேர்மையான லஞ்ச லாவண்யமற்ற ஒரு ஆட்சியை தர வேண்டும் என்பதுதான். மேலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலின் போது வெளிப்படையாக கூறினால்தான் மக்கள் முடிவெடுக்க வசதியாக இருக்கும். எனவே ஜெயித்த பிறகு முதல்வர் வேட்பாளர் முடிவு செய்து கொள்ளலாம் என நினைத்தால் டெல்லி தேர்தல் முடிவுகளில் பாஜகவின் முடிவு ரஜினிக்கு பாடமாக அமைந்துவிடும்.

காந்தியவாதி
எனவே இப்போதைக்கு அவரிடம் இருக்கும் கறை படியாத கை என்றால் அது தமிழருவி மணியன். இவர் தமிழகத்தை பற்றி நன்கு தெரிந்தவர். தமிழக பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்தவர். இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், இதுவரை இவர் மீது எந்த வித புகாரும் எழுந்ததில்லை. அவர் நினைத்திருந்தால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பதவி சுகத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேல் அவர் ஒரு காந்தியவாதி. எனவே ரஜினியின் சாய்ஸ் இவராக இருக்கலாம் என்பது நமது கணிப்பு.

எதிர்ப்பு
ஒரு வேளை இவர் இதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் அவரது அண்ணன் சத்யநாராயணராவாக இருக்குமோ என்று யூகம் கொடி கட்டி பறக்கிறது. ரஜினி தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். வாக்குரிமை, ஆதார் கார்டு அனைத்து தமிழக முகவரியிலேயே இருக்கிறது. அவரையே சிலர் வேறு மாநிலத்தவர் என கூறுகின்றனர். அவரது அண்ணன் சத்யநாராணயனோ முழுக்க முழுக்க கர்நாடகத்தில் வசித்து வருகிறார். எனவே இவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் நிச்சயம் இதற்கு எதிர்ப்பு கிளம்பும்.

பூர்த்தி
சரி அவரது கட்சியிலாவது கறைப்படியாத கைகள் இருக்கின்றனரா என்றால் நமக்கு தெரிந்தவரையில் யாரும் தென்படவில்லை. அதற்காக அந்த கட்சியில் உள்ளவர்கள் ஊழல்வாதிகள் என்றும் நாம் சொல்லவில்லை. குறிப்பிட்டு பெயர் சொல்லி சொல்வதற்கேற்ப யாரும் இல்லை என்பதே நம் கருத்து. ரஜினியுடன் நட்பு பாராட்டி வருபவர்கள், அண்மையில் அவரை அடிக்கடி சந்தித்து வருபவர்கள் யாரேனும் இருப்பவரா என்றால் நிச்சயம் ரஜினியின் நோக்கத்தை அவர்களால் பூர்த்தி செய்ய முடியாது.

ரஜினிக்கு ஆப்ஷன்கள்
ஒன்று லஞ்சத்திற்கு எதிராக உள்ள சகாயம் ஐஏஎஸ் போன்றோரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது இல்லாவிட்டால் தமிழருவி மணியனை அறிவிப்பது, அதுவும் இல்லாவிட்டால் விருப்பமே இல்லாமல் கட்சியை தொடங்குவது போல் தானே முதல்வர் பதவியில் நிற்பது. இவைதான் ரஜினிக்கு முன்னால் இருக்கும் ஆப்ஷன்கள். அவர் எதை லாக் செய்வார் என்பது அவர் அறிவிக்கும் வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications