வரிசையாக அட்டாக்.. அடுத்த குறி யார்? - ரெய்டுகளால் கலக்கத்தில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள்!
சென்னை : வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவதால், அடுத்த குறி நாமாக இருக்குமோ என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான செய்யாதுரை ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான காமராஜ் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினரும், வருமான வரி அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரிய ட்விஸ்ட்! ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் காலாவதியாகவில்லை! ஹைகோர்ட்டில் எடப்பாடி திடீர் யூடர்ன்
அதிமுக முன்னாள் அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் எம்.எல்.ஏவுமான ஆர்.காமராஜ் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அரசு பதவியைத் தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த விபரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து இன்று காமராஜுக்கு சொந்தமான 49 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
காலை முதல்
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான சொத்து குவிப்பு புகாரின் பேரில், இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 2015 கணக்கீட்டின்படி காமராஜின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 ஆக இருந்த நிலையில் தற்போது காமராஜ் மற்றும் அவரது மகன்கள் பெயரில் தற்போது ரூ. 58 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரத்து 749 மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இது அவர்களது வருமானத்துக்கு மீறிய வகையிலான சொத்தாக கணக்கிடப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
களத்தில் இறங்கிய ஐடி அதிகாரிகள்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் அதேநேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளும் திடீரென காமராஜ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையில் இறங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகர், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான செய்யாதுரை ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டிலேயே இறங்கியுள்ளனர் ஐடி அதிகாரிகள்.
கலக்கத்தில் அமைச்சர்கள்
இந்நிலையில் அடுத்த ரெய்டு யார் வீட்டில் நடக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். சமீபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடந்தது. இன்று காமராஜ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடக்கிறது.
கடந்த ஆண்டும்
இதேபோல, கடந்த ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப்பட்டது. எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனைகளை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
அடுத்த ரவுண்டு
இந்நிலையில், தற்போது மீண்டும் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக அதிமுகவினரை குறி வைத்திருப்பதால், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும், அடுத்த குறி நாமாக இருக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. தனது சகாக்கள் டார்கெட் செய்யப்பட்டிருப்பதால் எடப்பாடி பழனிசாமியும் அதிர்ச்சியடைந்துள்ளார்.