மதில் மேல் பூனையாக பாஜக.. ‘சுத்து’ போடும் ஓபிஎஸ், ஈபிஎஸ்! டெல்லியில் திரளும் லீடர்கள்!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி இருக்கும் சூழலில், ஓபிஎஸ் அணியும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதிமுகவில் இரு அணிகள் களமிறங்கினால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், பாஜகவின் ஆதரவைப் பெறுவதில் இரு தரப்பும் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கட்சிகளும் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படி நொறுங்கிப்போச்சே.. டீலில் விட்ட கூட்டணி கட்சி.. ஷாக் ஆகி பார்த்த ஓபிஎஸ்! என்ன முடிவெடுப்பாரோ?
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணிச் சார்பாக காங்கிரஸ் கட்சி களமிறங்குகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் முடக்குவாரா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
இரு துருவங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். இருவரும் ஒன்றாக இருந்தபோது கடந்த தேர்தலில் த.மா.காவிற்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஈபிஎஸ் தரப்பினர் ஜிகே வாசனை சந்தித்து ஆலோசித்த நிலையில், அதிமுக போட்டியிட சம்மதம் தெரிவித்தார் வாசன்.
இரட்டை இலை
இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி தரப்பு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஆனால், இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பதில் தான் சிக்கல் நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே இரட்டை இலை சின்னம் குறித்த முடிவை பெறுவதில் தீவிரமாக உள்ளனர். இதில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரையில் உறுதிப்படுத்தாத நிலையே உள்ளது.
மதில் மேல் பூனை
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே பாஜக தலைமையின் விருப்பமாக இருப்பதால் இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை பா.ஜ.க தலைமை எடுக்கும் என்பது மதில்மேல் பூனையாக உள்ளது. ஆனால் பா.ஜ.க ஆதரவு அணிக்கு தான் இரட்டை இலை ஒதுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் டெல்லியில் ஆதரவைப் பெற இருவரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் மூவ்
இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னம் கோரி எடப்பாடி பழனிசாமி அணியினர் விரைவில் முறையிட திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சட்ட வல்லுநர்களுடன் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளனர். இதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இரட்டை இலையைப் பெற அழுத்தம் கொடுக்க தேர்தல் ஆணையத்திற்குச் செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
பாஜக ஆதரவு யாருக்கு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்கும் விதமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் களமிறங்கினால், இருவருமே இரட்டை இலை சின்னம் தங்களுக்கு வேண்டும் எனப் போராடுவார்கள். இதற்காக பாஜகவின் ஆதரவையும் நாடுகின்றனர். எனினும், இருவரும் போட்டியிட்டால் சின்னம் முடங்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பதன் மூலம் அதிமுக சிக்கலில் பாஜகவின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியவரும்.
முடிவெடுக்கவில்லை
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதற்கான முயற்சியில் பாஜக இறங்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கவில்லை என்றும் திமுகவை வீழ்த்துவதே பாஜகவின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்தார்.