ஓபிஎஸ் பற்றி ஏன் பேசாம இருக்கீங்க.. சட்டசபையில் நேரா அதிமுகவிடம் கேட்ட துரைமுருகன்..ஒரே சிரிப்பலை
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுகவினர் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பற்றி பேசிய நிலையில் ஓ பன்னீர் செல்வத்தை குறிப்பிட்டு பேச மறுத்தனர். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குறுக்கீட்டு ஓ பன்னீர் செல்வம் பற்றி ஏன் பேசாமல் இருக்கீங்க. அவர் எதுவுமே செய்யலையா? என கேள்வி எழுப்பியது பரபரப்பாக சென்ற சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். இந்த பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு கட்சியின் எம்எல்ஏக்களும் பங்கேற்று கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

பட்ஜெட் மீதான விவாதம்
இந்நிலையில் தான் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இதில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் அதிமுக தலைவர்களான முன்னாள் முதல் அமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை பாராட்டி பேசினார். மேலும் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டு பேசினார்.

குறுக்கிட்ட அமைச்சர் பிடிஆர்
இந்த வேளையில் திடீரென்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டார். அப்போது, ‛‛உங்களுக்கு கொடுத்த பாதி நேரத்தில் பாராட்டு தெரிவித்தே கடந்துவிட்டது. பட்ஜெட் விவாதத்துக்குள் வர வேண்டும்'' என கூறினார். ஆனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கால திட்டங்களை பட்டியல் போட்டோர்.

துரைமுருகன் கேள்வி
இந்த வேளையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு பேசினார். அப்போது, ‛‛அதிமுக தலைவர்களின் திட்டங்களை சரியாக சொல்லிவரும் உறுப்பினர், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பற்றி பேசாதது ஏன்? ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லையா? என கேள்வி எழுப்ப சபையில் சிரிப்பலை எழுந்தது. பரபரப்பாக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்த நிலையில் துரைமுருகனின் இந்த செயலால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சியினரும் இந்த கேள்வியால் சிரித்தனர்.

ஓபிஎஸ்ஸை எதிர்த்த ஈபிஎஸ்
முன்னதாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் ஒரே மனதாக நிறைவேறியது. கடந்த 23ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீது அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேசியதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார். ஓ பன்னீர் செல்வம் அதிமுக என குறிப்பிட்டு பேசிய நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் அப்பாவுவை பார்த்து ‛‛ஒரு கட்சிக்கு ஒருவர் என்ற விதம் பேச அழைத்தீர்கள். அதிமுக என்பது எங்கள் அணி தான். எங்களது சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதன்பிறகும் பேச அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம் இருக்கிறது'' என கொந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications