அன்று மோடிக்காக சண்டை.. இன்று ஓபிஎஸ் பக்கம்.. ‘மேலிட பிளான்’ - பாக்யராஜ் தலையீட்டின் பின்னணி என்ன?
சென்னை : சமீபத்தில், பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசிய பாக்யராஜ், இன்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து, நீதிமன்றங்களில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்புகள் போராடி வரும் நிலையில், ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் இன்று ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் தீவிர அபிமானியான பாக்யராஜ், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில், திடீரென அதிமுக பிரச்சனையை தீர்த்து வைக்கக் களமிறங்கியிருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் நெருக்கம்
முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் மீது தீராத பாசம் கொண்டவர் பாக்யராஜ். அவரது திரையுலக வாரிசு என்றும் சொல்லப்பட்டவர். எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, அமெரிக்காவுக்கே சென்றார் பாக்யராஜ். அப்போது அவரை பார்க்க அனுமதிக்காத நிலையில், சென்னை வந்ததும், விஷயத்தைக் கேள்விப்பட்டு எம்.ஜி.ஆரே பாக்யராஜை அழைத்துச் சந்தித்தார்.

அதிமுக
அதிமுக மீது அபிமானம் கொண்ட பாக்யராஜ், அதிமுகவுக்கு ஆதரவாக மேடைகளிலும் பிரச்சாரம் செய்துள்ளார். பின்னாளில் பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியையும் தொடங்கினார். ஆனால், அந்தக் கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காததால், கட்சியை திமுகவோடு இணைத்துவிட்டார். அதன்பிறகு, அரசியலில் கவனம் செலுத்தாத நிலையில், சமீபகாலமாக அவரது நடவடிக்கைகள் அரசியல் பக்கம் வருவதை உறுதி செய்தன.

மோடிக்கு ஆதரவு
சமீபத்தில், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என பாக்யராஜ் கூறியது அடுத்த சர்ச்சையை கிளப்பியது. 'பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022' என்ற நூல் வெளியீட்டு விழா பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய பாக்யராஜ், இந்தியாவிற்கு மோடி போன்றவர்கள் தேவை. மோடியைப் போல சுறுசுறுப்பான பிரதமரை நான் பார்த்ததில்லை என்றார்.

சர்ச்சை பேச்சு
மோடியை விமர்சனம் செய்ய ஆட்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். அதற்கு செவி சாய்க்காமல் செல்ல வேண்டும். விமர்சனம் செய்பவர்களை, குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் என பாக்யராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மாற்றுத் திறனாளிகளை ஏன் இழிவுபடுத்துவதாக பாக்யராஜின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சில மணி நேரத்தில் இயக்குநர் பாக்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

திராவிட சிந்தனைகள்
அதில் பாக்யராஜ், நான் பாஜக கிடையாது, எனது மனதில் திராவிடத் தலைவர்களின் சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கின்றன. பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி உள்ளேன், என தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

அதிமுக ஒண்ணும் இல்லாம போயிடக்கூடாது
அதன்பிறகு, அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு அதுகுறித்து ஒரு விழாவில் பேசிய பாக்யராஜ் அதிமுக உடையக் கூடிய அளவுக்கு ஒரு துர்பாக்கியமான சூழல் இருப்பது மனதுக்கு வேதனையை கொடுக்கிறது. எம்ஜிஆர் மக்களுக்காகவே கஷ்டப்பட்டு தொடங்கிய கட்சி. அது வீணாக போகக் கூடாது. அனைவரையும் அரவணைத்து செல்வது நல்லது. கட்சி ஒன்றும் இல்லாமல் போகும் அளவுக்கு ஒரு சூழல் வரக் கூடாது எனக் கூறியிருந்தார்.

நிராகரித்த ஈபிஎஸ்
இந்நிலையில் தான், அதிமுக மோதல் விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்த வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பை நிராகரித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று ஆலோசனை
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் சென்னை ராயப்பேட்டையில் தனியார் ஹோட்டலில் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் அங்கு சென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இந்த கட்சியை எப்படி விட்டு விட்டு சென்றார்களோ, அதே போல அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எம்ஜிஆர் உடல் நலமில்லாமல் இருந்தபோது அரசியல் மேடைகளில் பேசியுள்ளேன்.

ஈபிஎஸ்ஸை சந்திப்பேன்
இப்போது அவருடைய பேரை காப்பாற்றவும், கட்சியைக் காப்பாற்றவும் சிறிய தொண்டனாக என்னாலான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்துவார்கள். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன?
சில வாரங்களுக்கு முன்னர், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பேசிய பாக்யராக், மோடியுடன் இணக்கமாகச் செல்லும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரோடு இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்யராஜ் ஓபிஎஸ்ஸோடு இணைந்ததற்குப் பின்னணியில் பாஜகவின் திட்டம் இருக்கலாம் என்றும் சந்தேகம் கிளப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சமரச நடவடிக்கைக்காக
எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைத்து வைக்க விரும்பும் பாஜக மேலிடம், பாக்யராஜ் மூலம் அதைச் சாதிக்க முயற்சிக்கிறது என்பதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்கேற்றார்போல், பாக்யராஜும், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசுவேன் எனக் கூறியிருப்பது, அந்தப் பேச்சுகளை வலுவாக்குகிறது. பாக்யராஜின் முயற்சி பலிக்குமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications