பாஜக மாநில நிர்வாகி ‘திடீர்’ பதவி விலகல்.. அண்ணாமலையின் லெஃப்ட் ஹேண்ட் உடன் உரசல்? பின்னணி என்ன?
சென்னை : தமிழக பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்த பாலாஜி தங்கவேல், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியுடன் தொடர்ந்து ஏற்பட்டு வந்த உரசல் காரணமாகவே, அவர் பதவியில் இருந்து விலகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமர் பிரசாத் ரெட்டி, தன்னை முன்னிலைப்படுத்தியே விளம்பரம் செய்வதாகவும், கட்சித் தலைமையிடம் அவர் மட்டும் பேர் வாங்கிக் கொள்வதாகவும் அதன் காரணமாகவே பாலாஜி தங்கவேல் கடுமையாக அதிருப்தியடைந்து பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமர் பிரசாத் ரெட்டி
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர்போன தமிழக பாஜகவில் சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி, மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர். அண்ணாமலையின் லெஃப்ட் ஹேண்ட் நான் தான் எனக் கூறிக் கொள்பவர். தொடர்ந்து பேட்டி, ட்வீட் என ஆக்டிவ்வ்வாக இருந்து வருகிறார். சமீபத்தில், நீட் தேர்வு எழுதிய மாணவியை அண்ணாமலை காலில் விழச் சொல்லி கண்ணைக்காட்டி சர்ச்சையில் சிக்கினார்.

மோடி கபடி லீக்
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் "மோடி கபடி லீக்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. இதையொட்டித்தான் அந்த அணிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவரான பாலாஜி தங்கவேல், திடீரென அந்தப் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவில் விரிசல்
பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் நடைபெற்று வந்த இந்த மோடி கபடி லீக் போட்டி ஏற்பாடுகளில் துணை தலைவர் பாலாஜி தங்கவேல், அக்னி ராஜேஷ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்தனர். எனினும், அமர் பிரசாத் ரெட்டி தன்னை மட்டுமே முன்னிறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அனைத்து பேனர்களிலும் தன் புகைப்படம் இருக்க வேண்டும் என ஆர்டர் போட்டதாகக் கூறப்படுகிறது. இது அந்த அணிக்குள் விரிசலை ஏற்படுத்தி வந்தது.

தன்னை முன்னிலைப்படுத்தி
விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாநில நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டு வந்தாலும், அமர் பிரசாத் ரெட்டி, தானே எல்லா பணிகளையும் செய்வதாக தலைமையிடம் சொல்லிக் கொள்கிறார் என்றும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடனான நெருக்கத்தால் அவரது ஆட்டம் ஓவராக இருக்கிறது என்றும் லேசுபாசாக புகார்கள் கிளம்பி வந்தன.

திடீர் ராஜினாமா
இந்நிலையில் தான், துணைத் தலைவராக இருந்த பாலாஜி தங்கவேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சி மேலிடத்திடம் தன்னைத் தவிர யாரும் பாராட்டு பெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக சமீப சில நாட்களாக அமர் பிரசாத் ரெட்டி - பாலாஜி தங்கவேல் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் அவர் கடிதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அம்பலமான விலகல்
பாலாஜி தங்கவேல், பதவியில் இருந்து விலகியிருப்பது அவரது ட்விட்டர் பதிவு மூலமே உறுதியாகியுள்ளது. இதுவரை பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் என்று தன்னைக் குறிப்பிட்டு வந்த அவர், நேற்று எச்.ராஜா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படத்தில் 'பாலாஜி தங்கவேல், செங்கல்பட்டு - பாஜக' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications