சசிகலா புஷ்பாவா, சர்ச்சைபுஷ்பாவா.. எத்தனை பஞ்சாயத்து.. லேட்டஸ்ட் கீதா ஜீவன்
தூத்துக்குடி: திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா தொடங்கி தற்போதைய அமைச்சர் கீதா ஜீவன் வரை தொடர்ந்து சசிகலா புஷ்பா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இதுவரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம். திமுக குறித்து அவதூறாக பேசியதாக சசிகலா புஷ்பாவின் தூத்துக்குடி வீடு தாக்கப்பட்டது. அவருடைய கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட் வில் லிஸ்ட்டில் இருந்தவர் சசிகலா புஷ்பா. 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராகவும் பணிபுரிந்தார். இதையடுத்து 2014 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
இவர் திமுகவின் எம்பி திருச்சி சிவாவுடன் விமான நிலையத்தில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக அவரை ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து நாடாளுமன்றத்தில் பேசிய சசிகலா புஷ்பா, தான் நீக்கப்பட்ட கட்சியிலிருந்து உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
கால் இருக்காது..அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல்.. பாஜக சசிகலா புஷ்பா மீது போலீசில் புகார்
ஜெயலலிதா மீது குற்றச்சாட்டை
கிட்டதட்ட ஜெயலலிதாவின் மீது குற்றச்சாட்டை சசிகலா புஷ்பா முன்வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவர் தனது பதவிக்காலம் முடியும் வரை மாநிலங்களவையில் சுயேச்சையாகவே கருதப்பட்டார். இந்த நிலையில் இவர் கணவர் லிங்கேஸ்வர திலகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
சசிகலா புஷ்பா
இதையடுத்து ராமசாமி என்பவருடன் சசிகலா புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் ராமசாமியின் மனைவி நீதிமன்றத்தை அணுகி அந்த திருமணத்திற்கு தடை பெற்றார். இந்த நிலையில் நீதிமன்ற தடையை மீறி கடந்த 2018ஆம் ஆண்டு சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்டார். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிகலா புஷ்பா, கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
பாஜக துணைத் தலைவர்
இவர் தமிழக பாஜகவின் துணைத் தலைவராக உள்ளார். அண்மையில் கூட தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினம் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. பரமக்குடியில் நடந்த அந்த விழாவில் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார். அங்கு பாஜகவின் நிர்வாகி பொன் பாலகணபதி என்பவர் சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது வீடியோவாக வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தூத்துக்குடியில் உள்ள வீடு
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஆண்டாள் தெருவில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநில துறைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாலர் பொன் பால கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா பேசும் போது ஒன்றரை ஆண்டு திமுக ஆட்சியில் ஒன்றையும் கிழிக்கவில்லை.
சுய புராணம்
சுய புராணம் பாடத் தகுதி உள்ளவர்தான் அண்ணாமலை, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அண்ணாமலைக்குத்தான் மக்கள் கூட்டம் அதிகம் கூடுகிறது. சனாதனம் குறித்து நாங்கள் பேசுவோம், ஏனென்றால் அதுதான் எங்கள் கொள்கை என பேசியிருந்தார். இவர் பேசி கொண்டிருக்க, மறுபுறம் தூத்துக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மேடை ஏறும் போதுதான் அவரது கட்சி நிர்வாகிகள் மேடை ஏறுகிறார்கள் என கிண்டலாக குறிப்பிட்டார்.
சசிகலா புஷ்பாவின் வீடு
இதற்கு சசிகலா புஷ்பா பதிலடி கொடுக்கும் வகையில் பேசுகையில் நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும் போது கால் இருக்காது. நாக்கு இருக்காது, தூத்துக்குடியில் மாற்றம் வர போகிறது. கீதா ஜீவன் அமைச்சராக இருக்கும் போது தூத்துக்குடியில் திமுக தோற்க போகிறது. பாஜக வெல்ல போகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து இந்த கூட்டத்தில் சசிகலா புஷ்பா பேசி முடித்த அடுத்த நாள் அவருடைய வீடும், கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சசிகலா புஷ்பாவின் வீடு மீது தாக்குதல் சம்பவம் ஏற்பட்டதை அடுத்து பாஜகவினர் தொடர்ந்து அவருடைய இல்லத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அது போல் அமைச்சர் கீதா ஜீவனின் இல்லத்தை முற்றுகையிட்டும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். அண்மைக்காலமாக திமுக வெர்சஸ் பாஜக இடையே கடும் பிரச்சினை நிலவி வருகிறது.