"தமிழக ஆளுநர் சட்டசபை மரபை மீறவில்லை.." 'துக்ளக்' விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு!
சென்னை: ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறார்கள். அது ஏற்றுக்கொள்ளப்பட போகிறது என்று ஆளுநருக்கு தெரியும். அதை பார்த்துக்கொண்டு இருப்பாரா ஆளுநர். அதனால்தான் ஆளுநர் வெளியே போனார். அரசாங்கம் கொடுத்ததை அப்படியே படிக்க வேண்டும் என்ற விதி கிடையாது என்று 'துக்ளக்' இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழாவில் அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசினார். இதில் அவர் பேசியதாவது:-
அரசியல் என்பது போதை. அந்த போதையில் மிதப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியே வர முடியாது. எனவே அரசியலுக்கு வருவதற்கு முன்பு பல கட்ட பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதன் மூலம் தங்களை தகுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அரசியலுக்கு அவர்கள் வரவேண்டும். அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் குடும்ப ஒற்றுமை பின்பற்றப்படுவது கிடையாது.

அமெரிக்கா போன்ற நாடுகளில்
இன்னும் சொல்லப்போனால் குடும்பம் என்பதையே அவர்கள் தேசிய மயமாக்கி விட்டார்கள். எனவே பங்குச்சந்தை சரிந்து விட்டால் பென்சன் மருத்துவ உதவி என எதுவும் அந்த நாட்டு மக்களுக்கு கிடைக்காது. இதுவே அமெரிக்கா போன்ற நாடுகளில் பங்கு சந்தை சீரான நிலைமையில் இருப்பதற்கு ஒரு காரணம். எனவே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

லேசான ஆத்திரத்தை உருவாக்கியது
தேசிய திட்டங்களுக்கு தமிழ் பெயர் சூட்டாதது ஏன்? நாட்டை நடத்த தமிழ் மொழியை பிரதமர் மோடி பயன்படுத்துகிறாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர். நாடு முழுவதும் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு திட்டத்திற்கு பொதுவான மொழியில் தான் பெயர் சூட்ட முடியும். காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது பல மாநிலத்தவர்களுக்கு லேசான ஆத்திரத்தை உருவாக்கியது என்று கூட சொல்லலாம். பிரதமர் மோடி மீது இது கோபத்தை கூட ஏற்படுத்தியிருக்கலாம்.

அண்ணாமலை வளர்ந்து வருகிறார்
அந்த அளவு தமிழின் பெருமையை மத்திய அரசு பறைசாற்றியது. ஆன்மிகம் மட்டுமே மொழிகளை இணைக்க முடியும், அரசியலால் அல்ல. பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மீதான உணர்வு இயற்கையாகவே உள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இது அண்ணாமலை வளர்ந்து வருகிறார் என்பதையே காட்டுகிறது. இளைஞர்கள் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பஜனை செய்கின்றனர்
நிச்சயமாக இளைஞர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. தமிழகத்தில் ஜாதி-மதத்தை வளர்த்தது அரசியல் கட்சிகள் தான். தமிழகத்தில் திராவிட மாடல் என்று தொடர்ந்து பஜனை செய்கின்றனர். கருணாநிதி திராவிடத்தை தொட்டுக்கொண்டு தமிழை முன்னிறுத்தினார். ஆனால் இன்று அது நடப்பதில்லை. திராவிட மாடல் என்று தி.மு.க. தொடர்ந்து பேசி வருவது பாரதிய ஜனதாவுக்கு தான் சாதகம். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

என்ன தவறு இருக்கிறது?
சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரபை மீறிவிட்டார் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் தற்புகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய கருத்துக்களை எல்லாம் சட்டமன்றத்தில் பேசுவதை அவர் தவிர்த்ததில் என்ன தவறு இருக்கிறது?. இன்னும் சொல்லப்போனால் தனக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களை சட்டமன்றத்தில் இருந்து வெளியே அகற்றும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அத்தகைய சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது.

ஆளுநர் அமைதியாக இருந்தார்
ஆனால் பிரச்சினை வளர கூடாது என்ற நோக்கில் தான் ஆளுநர் அமைதியாக இருந்தார். எனவே கவர்னர் எந்த இடத்திலும் மரபை மீறவில்லை. திராவிட மாடல் என்ற பதத்திற்கு ஆளுநர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம். அவர் அதைக் கூற மறுத்தது ஆச்சர்யம் அல்ல. அது சட்டப்படி சரி. ஆளுநருக்கு எதிராக கோஷம் போட்டார்களே.. ஆளுநர் அவர்களை வெளியேற்றி இருக்கலாம். ராஜஸ்தானில் 1966-ல் இது நடந்தது. ஆளுநர் பேசுவதற்கு முன்பாக குறுக்கிட்ட 2 எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

கேரளாவில் 3 முறை நடந்துள்ளது
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறார்கள். அது ஏற்றுக்கொள்ளப்பட போகிறது என்று ஆளுநருக்கு தெரியும். அதை பார்த்துக்கொண்டு இருப்பாரா ஆளுநர். அதனால்தான் ஆளுநர் வெளியே போனார். அரசாங்கம் கொடுத்ததை அப்படியே படிக்க வேண்டும் என்ற விதி கிடையாது. அது மரபு.. பாரம்பரியம். அதை படிக்கிறேன் என்று சொல்லிவிட்டு படிக்காமல் இருப்பதும் மரபுதான். கேரளாவில் 3 முறை நடந்துள்ளது. நீங்கள் கொடுத்ததை படிக்க வேண்டும் என்பது சட்டம் கிடையாது. இது ஏற்கப்பட்ட மரபு. ஆளுநர் என்ன பேசுகிறாரோ அதுதான் உரை. ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் முறை. இரண்டு அரசாங்கம் இதுபோல ராஜினாமா செய்து இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications