ஸ்டாலினின் ‘6’ அதிரடி அரசியல் கணக்குகள்.. எம்ஜிஆரை துணைக்கு அழைத்ததன் பின்னணி.. டார்கெட் அவங்க தானா?
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று, எம்.ஜி.ஆர் உடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்திப் பேசியிருப்பதற்குப் பின்னணியில் 6 முக்கியமான அரசியல் வியூகங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்களை திமுகவிற்குச் சாதகமாக திருப்பும் வகையிலும், பாஜகவின் திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலுமே முக ஸ்டாலின் எம்.ஜி.ஆர் அரசியலை கையில் எடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
அதிமுகவில் இருக்கும் எம்.ஜி.ஆர் வாக்கு வங்கியை திமுக பக்கம் திருப்பும் நோக்கம் உள்ளிட்ட பல காரணங்கள், முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்குப் பின்னணியில் இருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
பொங்கல்: ரேஷன் அட்டைக்கு ரூ.1000? வங்கி கணக்குடன் ஆதாரை மட்டும் இணையுங்க.. கூட்டுறவுத்துறை சர்குலர்
ஸ்டாலின் மூவ்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு குறுந்தகடு, சிறப்பு மலர் மற்றும் 'பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்' என்ற நூலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்குபெற்றதற்கும், பேசியதற்கும் பின்னணியில் பல்வேறு அரசியல் மூவ்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
பெரியப்பா எம்.ஜி.ஆர்
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 20 ஆண்டு காலம் தி.மு.கவில் பயணித்தவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை விட தி.மு.கவில் தான் எம்.ஜி.ஆர் அதிக காலம் இருந்தார். எம்ஜிஆர் உடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எம்ஜிஆர் படம் வெளியாகும் போது முதல் ஆளாக டிக்கெட் வாங்கி பார்ப்பேன். பள்ளிக் காலத்தில் நன்கொடை வசூலுக்காக முதலில் எம்.ஜி.ஆரிடம் செல்வேன். பெரியப்பா என்ற முறையில் நான் சொல்கிறேன், நன்றாகப் படிக்க வேண்டும் என எனக்கு அறிவுரை வழங்குவார். என் மீது அளவு கடந்து பாசத்தையும், அன்பையும் கொண்டவர் எம்ஜிஆர். என் மீது மட்டுமல்ல, என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர் எம்ஜிஆர் எனப் பேசினார்.
எம்.ஜி.ஆர் பாசம்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் 100வது பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றதோடு, எம்.ஜி.ஆரை புகழ்ந்தும், அவருடனான தனது நெருக்கம் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிகரமாகப் பேசியதற்குப் பின்னணியில் பல அரசியல் நகர்வுகள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எதிர்க்கட்சியான அதிமுகவினர் கொண்டாடும் எம்ஜிஆரைப் பற்றி புகழ்ந்து, அவர் தன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததை ஸ்டாலின் வெளிப்படுத்தி இருப்பதற்குப் பின்னால் 6 முக்கியமான காரணங்கள் இருக்கின்றனவாம்.
எம்.ஜி.ஆர் - வாக்கு வங்கி
1. எம்.ஜி.ஆர் பெயருக்கென்றே ஒரு வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. குறிப்பாக, முதிய வாக்காளர்கள் பல லட்சக்கணக்கானோர் எம்ஜிஆரின் சின்னம் என்பதற்காகவே இரட்டை இலைக்கு வாக்களிப்பவர்கள். அவர்களின் வாக்கே அதிமுகவுக்கு ஒரு சாலிட் வோட் பேங்க்காக எப்போதும் கையில் இருந்து வருகிறது. அவர்களை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
சின்னம் - அரசியல்
2.ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் காரணமாக வரும் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போகலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், இரட்டை இலைக்கு என இருக்கும் வாக்காளர்களை அப்படியே, பாரம்பரியமான கட்சியான உதயசூரியன் பக்கம் திருப்ப வேண்டும், அதற்கு இந்த எம்.ஜி.ஆர் நெருக்க அரசியல் பேச்சு கைகொடுக்கும் என முதல்வர் ஸ்டாலின் நம்புகிறாராம்.
அதிமுகவை விட திமுகவில் தான்
3. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பிரிந்து அதிமுகவில் குழப்பம் நிலவி வரும் நிலையில், டிடிவி தினகரன், சசிகலாவும் ஏற்கனவே எம்ஜிஆர் ஆதரவு ஓட்டுகளை பிரித்துள்ளனர். அதேபோல, எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகிய கேசி பழனிசாமி தனி ரூட்டில் தொண்டர்களை திரட்டி ஆலோசித்து வருகிறார். அதிமுகவில் நிலவி வரும் இந்தக் குழப்பங்களை எல்லாம் விரும்பாத தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே எம்ஜிஆர் அதிமுகவை விட திமுகவில் தான் அதிக காலம் பங்களித்தார் எனப் பேசி இருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.
அவங்களை விட
4. இன்று அதிமுக தலைமைப் பொறுப்புக்கு அடித்துக்கொள்பவர்கள் எம்.ஜி.ஆரை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார்கள், அவர்களே வார்த்தைக்கு வார்த்தை புரட்சித் தலைவர் என்கிறார்கள், நான் சிறுவயது முதலே எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகப் பழகி இருக்கிறேன். எல்லோரையும் விட எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவன் நான் என வெளிப்படுத்துவதன் மூலம் ஓபிஎஸ், ஈபிஎஸ் என ஒட்டுமொத்த அதிமுகவுக்கும் நெருக்கடி கொடுக்க ஸ்டாலின் முயல்கிறார் என்கிறார்கள்.
பாஜக பாணி
5.பொதுவாக பாஜக, மக்கள் அபிமானமுள்ள தலைவர்களை தன்வயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும். எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களை உயர்த்திப் பிடித்து, அதன் மூலம் ஆதரவு திரட்டுவதில் வல்லவர்கள் பாஜகவினர். அம்பேத்கர், காமராஜர் என அந்தப் பட்டியல் நீளும். அதற்கு எதிர்வினையாகவே, அதிமுக கொண்டாடும் எம்ஜிஆரை, திமுக தலைவரான ஸ்டாலினும் உயர்த்திப் பிடிக்கிறார் என்கிறார்கள்.
பாஜகவிற்கு நெருக்கடி
6. அதேபோல, கடந்த ஆண்டு திமுக ஆட்சி அமைத்தது முதல் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி வருகிறார் ஸ்டாலின். திராவிடக் கட்சிகளின் சாதனை என அதிமுக ஆட்சிக் காலத்தையும் சேர்த்தே ஸ்டாலின் பேசி வருகிறார். ஒட்டுமொத்தமாக, திராவிடத்தை விரும்பாத பாஜகவிற்கு, எம்ஜிஆர் கையையும் கோர்த்துக்கொண்டு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே ஸ்டாலின் எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்திருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.