ட்விஸ்ட்.. டெல்லி ட்ரிப் எதிரொலி.. ஆளுநரை சந்தித்த மறுநாளே "விசி" மாநாட்டை ஒத்திவைத்த முதல்வர்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க இருந்த துணை வேந்தர்கள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை ஆளுநர் ஆர். என் ரவி தனது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் இவர்கள் அரசியல் பேசியதாக கூறப்பட்டது.
நாங்கள் அரசியல் பேசினோம். தமிழ்நாட்டிற்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆளுநர் நினைக்கிறார். ஆனால் நாங்கள் பேசிய அரசியல் பற்றி சொல்ல முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார் .
இவர்கள் சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில் தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
'கோவை குண்டு வெடிப்பு’ பாஜக பேரணியில் சர்ச்சையான முழக்கம்! பாஜகவினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு!
மாநாடு
அதன்படி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் மாநாடு நடக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன் முடி அறிவித்தார். வருகிற 17-ந் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர்களின் மாநாடு சென்னையில் நடக்க உள்ளது. திமுக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு ஆளுநருக்கு எதிரான முக்கியமான மூவாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் சட்டப்படி இப்போதும் ஆளுநர்தான் பல்கலைக்கழக வேந்தர். ஆனால் அவரை அழைக்காமல் இந்த கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
முடிவு
ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கும் பதிலடியாக இது பார்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஆளுநர் ஆர். என் ரவி பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு நடக்கும் போதே ஆளுநருக்கு பதிலடி தரும் விதமாக தமிழ்நாடு அரசு வேந்தர்கள் மசோதாவை நிறைவேற்றியது. ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை அறிவிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் பொறுப்பு
அதாவது ஆளுநரை இந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு முதல்வரை வேந்தராக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை ஆளுநர் ரவி இன்னும் டெல்லிக்கு அனுப்பவில்லை. இது கிடப்பில் உள்ள நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை துணை வேந்தர்கள் மாநாடு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்க இருந்த துணை வேந்தர்கள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ள நிலையில் நாளை நடக்க இருந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மறு தேதி அறிவிக்கப்படவில்லை. இன்று டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு நாட்கள் அங்கே இருப்பார். நேற்று ஆளுநர் ஆர். என் ரவி கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆளுநர் மாளிகை சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆர். என் ரவி நேரில் சென்று வரவேற்றார். இந்த நிலையில்தான் இன்று துணை வேந்தர்கள் மாநாடு ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.