அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!
சென்னை: தமிழ்நாட்டில் கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் மாநில தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தி வருகிறது.
வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என பல்வேறு படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழின் பெருமையை பறைசாற்றி வருகின்றன. கீழடி அகழாய்வை நடத்தி வந்த மத்திய தொல்லியல் துறை அடுத்த கட்ட ஆய்வுகளை வேறு எங்கும் நடத்தவில்லை. நடத்திய ஆய்வு முடிவுகளையும் வெளியிடவில்லை

மனு தாக்கல் செய்தனர்
இந்த நிலையில் தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராசும், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் ஆகியோரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

காணொலி வாயிலாக ஆஜர்
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு, முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ஆஜரான நம்பிராஜன், அஜய் யாதவ் ஆகியோர் தற்போது 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 7 இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள் எனவும் குறிப்பிட்டனர்.

தமிழுக்கு அதிக கல்வெட்டுக்கள்
கல்வெட்டுக்களின் விபரங்கள் குறித்த கேள்விக்கு மொத்தமாக 86,000 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டிருப்பதாகவும் அவற்றில் 27,000 தமிழ் கல்வெட்டுக்கள், 25,756 கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழிக்கானவை மற்ற கல்வெட்டுக்கள் மற்ற மொழிக்கானவை என்று தெரிவித்தனர்.இதனை தொடந்து பேசிய நீதிபதிகள் தொல்லியல் துறை வெளியிட்ட தரவுகளோடு ஒப்பிடுகையில், தமிழ் மொழி கல்வெட்டுக்கள் குறித்த விபரங்கள் குறைவாக குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது.

சமஸ்கிருத அலுவலகம்
அதிக கல்வெட்டுக்களைக் கொண்ட தமிழுக்கென தனியே ஏன் அலுவலகத்தை அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து சென்னையில் இருக்கும் கிளை அலுவலகத்தின் பெயர் என்ன? என்ற நீதிபதிகளின் கேள்விக்கு தொல்லியல்துறை தரப்பில், திராவிடன் கிளை அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், லக்னோவில் இருக்கும் அலுவலகம் எவ்வாறு அடையாளப்படுத்தப்படும்? என கேள்வி எழுப்பினர். சமஸ்கிருத அலுவலகம் என பதிலளிக்கப்பட்டது.

இந்தோ-ஆரிய மொழி
அதற்கு நீதிபதிகள் அதிக கல்வெட்டுக்களை கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாக கருதப்படுகையில், சமஸ்கிருதம் இந்தோ-ஆரிய மொழியாகத்தானே கருத வேண்டும்? என கேள்வி எழுப்பினர். அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அனைத்து மொழிகளும் நிகரானவை. ஆனால் ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டியவை. மொழிகளுக்கிடையே வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க இயலாது. தமிழ் கல்வெட்டுக்களை கண்டறிந்து, தமிழை பெருமை படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே. மொழி வாரியாக கல்வெட்டுக்களின் எண்ணிக்கை, நிபுணர்களின் எண்ணிக்கை, காலிப் பணியிடங்களின் விபரங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications