"ஆல்ரவுண்டர்".. அப்பவே எச்சரித்த ஓபிஎஸ்.. விஜயபாஸ்கரை வளைக்கும் ஸ்டாலின்! யார் அந்த 7 பேர்?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மரண விசாரணையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கரை விசாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் முழுமையாக பொதுவில் வெளியாகவில்லை.
இந்த வழக்கில்தான் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

அறிக்கை
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதம் செய்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருமதி V.K.சசிகலா, திரு சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது, என்று தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர்
இந்த வழக்கில் விஜயபாஸ்கர் விசாரணை செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது அவர் குறி வைக்கப்பட்டு இருந்தாலும் இதை 2017லேயே உறுதியாக சொன்னவர் ஓ பன்னீர்செல்வம். அப்போது அதிமுகவில் கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வந்தது. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ பன்னீர்செல்வம் அணி என்று கட்சி இரண்டாக பிரிந்து கிடந்தது. இதனால் இரண்டு தரப்பும் மாறி மாறி புகார்களை வைத்துக்கொண்டு வந்தது. அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.

ஓ பன்னீர்செல்வம்
அப்போது ஓ பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டு வைத்த விஜயபாஸ்கர்.. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்றால் கண்டிப்பாக மாட்ட போவது ஓ பன்னீர்செல்வம்தான்,. அவர்தான் ஆக்டிங் முதல்வர் போல செயல்பட்டார். அவர் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும். ஓ பன்னீர்செல்வம்தான் இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளி அதனால் அவர் கண்டிப்பாக மாட்டுவார் என்று விஜயபாஸ்கர் கூறினார்.

குற்றச்சாட்டு
இதற்கு பதிலடி தரும் விதமாக 2017ல் சென்னையில் மார்ச் மாதம் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஓ பன்னீர்செல்வம்.. அம்மாவின் உடல்நிலை பற்றி அதிகம் பேசியது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். அவர் ஆல் ரவுண்டர். ஜெயலலிதா இருந்த அப்போலோ 2வது மாடியை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அவர் ஒரு 7 பேரை போட்டு வேலை வாங்கினார். அந்த 7 பேர்தான் அந்த மாடியை கட்டுப்படுத்தினார்கள்.

ஆல் ரவுண்டர்
அவர் ஆல் ரவுண்டர் பிளேயர். விசாரணை நடந்தால் நான் மாட்டுவேன் என்று கூறுகிறார். நான் சொல்கிறேன்.. நீதி விசாரணை நடந்தால்.. உண்மையில் உண்மை நிலைமை வந்தால் மாட்ட போவது விஜயபாஸ்கர்தான். அவர்தான் முதல் குற்றவாளி, என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார். ஓ பன்னீர்செல்வம் அன்று புகார் வைத்த நிலையில்.. தற்போது தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயபாஸ்கருடன் 7 பேர் இருந்ததாக ஓபிஎஸ் கூறி இருந்த நிலையில் யார் அந்த 7 பேர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications