உங்க தாத்தா வீட்டு காசா? “கிளாம்பாக்கம்” கருணாநிதி பெயர் ஏன்? சீறிய சீமானுக்கு சேகர்பாபு பதில்!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதற்கு கருணாநிதி பெயர்? யார் தாத்தா வீட்டு காசு? என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் சேகர்பாபு சீமானுக்கு பதில் அளித்துள்ளார்.
சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை நகருக்கு மிக வெளியே, கோயம்பேட்டில் இருந்து அதிக தொலைவில் இருப்பதால் இந்த பேருந்து நிலையத்துக்கு செல்லவும் அங்கிருந்து வரவும் மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் அதைச் சுற்றியே சர்ச்சைகள் வட்டமடிக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 400 கோடி ரூபாயில் எதற்கு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம்? 40 கிமீ தொலைவில் பேருந்து நிலையத்தை வைத்தால் மக்கள் எப்படி அவ்ளோ தூரம் செல்ல முடியும்? அங்கிருந்து எவ்வளவு தூரம் பயணித்து வர முடியும்? அங்குள்ள மாணவர்கள் எவ்ளோ கஷ்டப்படுவார்கள்?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் எதற்கு? தம்பி உதயநிதி கேட்கிறார் உங்க அப்பன் வீட்டு காசா என்று, நான் அவரை கேட்கிறேன் உங்க அப்பன் வீட்டு காசா? யார் தாத்தா வீட்டு காசு? எங்களின் வரிப் பணத்தில் கட்டிய பணத்துக்கு எதுக்கு கருணாநிதி பெயர்?
நாட்டில் கருணாநிதியை விட்டால் வேறு தலைவனே கிடையாதா? யாருமே இல்லையா? அவருக்கு பேனா வைக்கணும்.. மருத்துவக் கல்லூரிக்கு முத்துலட்சுமி ரெட்டியின் பெயர் வைக்க வேண்டியதுதானே? ஜல்லிக்கட்டுக்கு கேலரி கேட்டோமா? அதுக்கு உங்க அப்பா பெயரா? அப்புறம் ஏன் தமிழ்நாடு? பேசாம கருணாநிதி நாடு என அறிவிச்சிட்டு போங்க” எனக் காட்டமாகப் பேசினார் சீமான்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபுவிடம் சீமானின் விமர்சனம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சேகர்பாபு, “உழைக்கும் வர்க்கம் மற்றும் சமத்துவத்திற்காக போராடி, தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு, 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வைத்ததில் எந்த தவறும் இல்லை.
அனைத்து தலைவர்களுக்கும் புகழ் சேர்க்கும் அரசுதான் திமுக அரசு. நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது திமுக ஆட்சி. தமிழகம், தமிழக மக்களுக்காக உழைத்த அனைவருக்கும் பெருமை சேர்ப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திராவிட மாடல் ஆட்சி என்பதை சீமானுக்கு பதிலாகக் கூற கடமைப்பட்டுள்ளேன் ” என்று விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications