ஆ.ராசா, திருமாவளவனுக்கு திடீர் ஆதரவு- சீமான் அறிவிப்புகளின் பின்னணியில் இருக்கும் மெகா ஸ்கெட்ச்!
சென்னை: திமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வரும் ஆதரவு பல்வேறு விவாதங்களை உருவாக்கி உள்ளது.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, சென்னை நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார்.
இது நியாயமா? 'அப்பட்டமான மனித உரிமை மீறல்..' - சவுக்கு சங்கருக்காக கொதித்தெழுந்த சீமான்!
ஆ.ராசா எதிர்ப்பு போராட்டம்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு எதிராக பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் சிறியது, பெரியது என பார்க்காமல் ஒன்று சேர்த்து கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆ.ராசாவுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன. பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். பல இடங்களில் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். ஆராசாவை திமுகவை விட்டே நீக்க வேண்டும் என கெடுவும் விதித்தனர் பாஜகவினர்.
திமுக நிலை
ஆனால் இந்த விவகாரத்தில் திமுக பெருந்தலைகள் எதுவும் பேசவில்லை. அதேநேரத்தில் திமுகவின் பேச்சாளர்கள் பலரும் ஆ.ராசாவுக்கு ஆதரவாக களத்தில் நின்றனர். இந்த தருணத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக திமுகவை பரமவைரியாக எதிர்க்கும் சீமான் பேசியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
சீமான் சொன்னது என்ன?
ஆ.ராசா விவகாரத்தில் சீமான் கூறுகையில், மனுதர்மத்தைச் சாடியதற்காக, அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்றார். மேலும், மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்கபலமாகத் துணைநிற்கிறது என முழுவீச்சில் ஆதரவு தெரிவித்திருந்தார் சீமான்.
திருமாவுக்கு சீமான் ஆதரவு
ஆ.ராசா விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அக்டோபர் 2-ந் தேதி ஊர்வல விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அக்டோபர் 2 ஊர்வலத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் இணைந்து சமூக நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். திருமாவளவனின் இந்த அறிவிப்புக்கு முதல் ஆதரவை தெரிவித்ததும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதேபோல் தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் சீமானும் திருமாவளவனும் பாஜகவினர் மீது சந்தேகம் தெரிவித்திருந்தனர். இதனால் சீமான், திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றது பாஜக.
சீமானின் வியூகம்
திமுகவின் ஆ.ராசா, விசிக தொல்.திருமாவளவன் ஆகியோரை தொடர்ந்து சீமான் ஆதரித்து வருவது, கோட்பாடு அல்லது கொள்கை அல்லது தத்துவார்த்த ரீதியிலானது என்பது மேலோட்டமான புரிதலுக்குரியதுதான்; ஆனால் அதன் பின்னணியில் சீமானின் வாக்கு வங்கி அரசியலுக்கான ஸ்கெட்ச் இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். ஆ.ராசா, திருமாவளவன் இருவருமே தலித்துகள்; வட தமிழகத்தில் தலித்துகளின் வாக்கு வங்கி மிக முக்கியமானது. இப்படி தலித் தலைவர்கள் ஆதரவு நிலைப்பாடு மூலம் தலித் வாக்குகளுக்கு குறிவைத்துதான் சீமான் காய் நகர்த்துகிறார். அதனால்தான் ஒவ்வொரு விவகாரத்திலும் ஆ.ராசா, திருமாவளவனை சீமான் விழுந்து விழுந்து ஆதரிக்கிறார் என்கின்றனர் அந்த மூத்த பத்திரிகையாளர்கள்.