நாகாலாந்தில் ஆர்என் ரவி மாறுதலாகும்போது என்ன நடந்தது? சில மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது ஏன்?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான மோதல் போக்குகள் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு கொடுத்த உரையில் இடம்பெற்ற வார்த்தைகள், வாக்கியங்களை நீக்கி வாசித்தது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் நாகாலாந்தில் ஆர்.என்.ரவி ஆளுநராக இருந்தபோது நடந்த சம்பவங்களை அலசுவோம்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் முந்தைய அதிமுக ஆட்சியில் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் அரசு இயற்றிய பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டு நாகாலாந்து மாநிலத்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார்.

நாகாலாந்து ஆளுநர்
ஆளுநர் ஆர்.என்.ரவி பத்திரிகையாளராக சில ஆண்டுகள் இருந்து, ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்தவர். உளவுத்துறையில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்ட ஆர்.என்.ரவி, நாகாலாந்து அமைதி பேச்சுவார்த்தைக் குழுவிற்கும் தலைமை தாங்கி இருக்கிறார்ர். அதன் பிறகு அவரையே அங்கு ஆளுநராக நியமனம் செய்தது மத்திய அரசு.

குற்றச்சாட்டுக்கள்
தமிழ்நாட்டின் ஆளுநராக தற்போது பதவி வகித்து வரும் சமயத்தில் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கள் எப்படி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதுடன் அவரது செயல்பாடுகள் மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டு உள்ளதோ அதேபோன்ற குற்றச்சாட்டுக்களே நாகாலாந்து மாநிலத்திலும் இருந்தது.

மோடியின் தூதர்
வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தனிநாடு கேட்டு போராடும் பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் தூதுவராகவே ஆர்.என்.ரவி அங்கு அனுப்பப்பட்டார். 5 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த அவர், 2019 ஆம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

மாநில அரசு நிர்வாகத்தில் தலையீடு
தனிநாடாக இருந்த நாகாலாந்தை இந்தியாவுடன் இணைத்ததற்கு இன்று வரை நாகா ஆயுத குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாகா ஆயுதக் குழுக்களை மாநில அரசு ஒடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாகாலாந்து அரசுடன் மோதல்
ஆனால், அதற்கு அங்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்த தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் அரசு ஆளுநர் ரவியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மறுத்தது. இதனால் ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையே மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் தான் சொல்வதை கேட்காவிட்டால் ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசு நிர்வாகத்தை கையில் எடுப்பேன் என்று எச்சரித்தார் ஆர்.என்.ரவி.

அரசு ஊழியர்கள் மீது புகார்
அதேபோல் நாகாலாந்து அரசு ஊழியர்களையும் நாகா ஆயுதக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்.என்.ரவி பேசியது பரபரப்பை அதிகரித்தது. இதனால் நாகாலாந்தில் உச்சக்கட்ட அரசியல் பதற்றம் ஏற்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அங்கு பிரிவினைவாதிகள், நாகா இனக்குழுக்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மாநில சுயாட்சி, நாகாலாந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டார் என அவர் தமிழ்நாடு ஆளுநராக அறிவிக்கப்பட்ட உடனே குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசியல் கட்சியினர் பலர் அடுக்க தொடங்கினர். இந்த நிலையில் அவர் தமிழ்நாடு ஆளுநராக அறிவிக்கப்பட்டவுடன் நாகாலாந்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. இது பிரிவினைவாதிகளின் செயல் என்பது பாஜகவினரின் வாதமாக உள்ளது.












Click it and Unblock the Notifications