"மிஸ்ஸாக வாய்ப்பிருக்கு.." இது மட்டும் நடந்தால் மழை வராமலும் போகலாம்! தமிழ்நாடு வெதர்மேன் புது தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் ஆகும் நிலையில், முதல்முறையாகப் புயல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதற்கிடையே இந்த புயலால் மழை பெய்ய எந்தளவு வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது நவ. முதல் வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழையைக் கொடுத்தது.
இருந்த போதிலும், அதன் பிறகு நமக்குப் பெரியளவில் மழை கிடைக்கவில்லை. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், புயல் எதுவும் இன்னுமே கூட உருவாகவில்லை.

மழை
கடந்த மாதம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமும் கரையை அடையும் முன் வலுவிழந்ததால் பெரியளவில் மழை கிடைக்கவில்லை. இப்போது வரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வடகிழக்கு பருவமழை குறைவாகவே உள்ளதாக வானிலை மையம் கூறுகிறது. இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறலாம் எனச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் வடதமிழக பகுதிகளில் நல்ல மழை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் வரும் 8,9,10ஆம் தேதிகளில் நல்ல மழை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

தாழ்வு மண்டலம்
அதாவது நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை 07ஆம் தேதி மாலை புயலாக வலுவடையக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 8,9ஆம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

பிரதீப் ஜான்
இதற்கிடையே இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது ட்விட்டரில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. . இது இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். மேலும், இது படிப்படியாகப் புயலாக வலுவடைந்து டிச.8ஆம் தேதி காலைக்குள் வடக்கு தமிழகம், புதுச்சேரி & ஆந்திர கடற்கரைகளை அடையும்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

மிஸ்ஸாக வாய்ப்பிருக்கு
இந்திய வானிலை மையத்தின் இந்த ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தமிழ்நாடு வெதர்மேன், "இது அதிகாரப்பூர்வ வானிலை அமைப்பின் தகவல். இருப்பினும் சிறிது தாமதம் ஏற்பட்ட வாய்ப்புகள் உள்ளது. வரும் டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் இது வட தமிழக கடற்கரைக்கு அருகில் வரக்கூடும். டெல்டா பகுதிகளில் இதனால் நல்ல மழை பெய்யும். இது சென்னைக்குக் கீழே கரையைக் கடக்கும் வரை மழை உறுதியாக இருக்கும். இருப்பினும், அது சென்னைக்கு மேல் நகர்ந்தால், மழை மிஸ்ஸாகிவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.

முக்கியம்
முன்னதாக கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது மிக மெதுவாகக் கரையை நோக்கி நகர்ந்ததால், பெரியளவில் மழை கிடைக்கவில்லை. இதனால் இப்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையைப் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில், இது சென்னைக்கு மேலே கரையைக் கடந்தால் மழை மிஸ்ஸாக வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதேநேரம் வரும் டிசம்பர் 9ம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக மிகப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications