இதெல்லாம் நியாயமா?.. டாஸ்மாக்கடைகளை மட்டும் மூடாமல் இருப்பது ஏன்?.. டிடிவி தினகரன் கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது 4,500-ஐ கடந்து விட்டது. ஓமிக்ரான் வைரசும் 120-ஐ கடந்து விட்டது. சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

கொரோனா அதிவேகம்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 16,577 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளுர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இப்படி கொரோனா அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

பொதுப் போக்குவரத்து அனுமதியில்லை
அதாவது மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் கடைகளை மட்டும் மூடாமல் விட்டிருப்பது ஏன்? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன் கேள்வி
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், 'தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதல்வர் ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும் (Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது. தேவைப்பட்டால் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications