அதிமுக பொதுக்குழு.. ஒரு இடத்தில் கூட ஓபிஎஸ் இல்லை.. கடைசியில் அந்த பூங்கொத்து கூட- ஓ காரணம் இதுதானா?
சென்னை : அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுக்குழுவுக்கான பேனர்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுக்கும் படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கான வரவேற்பு பேனர்களில் ஒரு பேனரில் கூட ஓ.பன்னீர்செல்வம் படம் இல்லாமல் இருப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

70 சதவீத பணிகள் நிறைவு
அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதி கட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுவரை 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அவரது தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

தடுக்க முயலும் ஓபிஎஸ்
இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். நேற்று பல மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கின் தீர்ப்பு பொதுக்குழு நடைபெறும் நாளான திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தொய்வில்லாமல் பணிகள்
ஜூலை 11ஆம் தேதி காலை 9:15 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புதான் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படாது என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம், விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் கே.பி.முனுசாமி, பெஞ்சமின் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

ஓபிஎஸ் புறக்கணிப்பு
அதிமுக பொதுக்குழுவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள வரவேற்பு பேனர்களில் ஒரு பேனரில் கூட ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதி ஆகிவிட்டதாக எடப்பாடி தரப்பினர் கூறி வரும் நிலையில், ஓபிஎஸ் இந்தப் பொதுக்குழுவில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பூங்கொத்து பேனர்
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுக்கும் படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கான வரவேற்பு பேனர்களில் ஒரு பேனரில் கூட ஓ.பன்னீர்செல்வம் படம் இல்லாமல் அச்சடிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு மட்டும்
அதிமுக பொதுக்குழுவுக்கு பொருளாளர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஈபிஎஸ் தரப்பு அழைப்பு அனுப்பிய நிலையில், அவர் தொடர்ந்து பொதுக்குழுவை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப் போராட்டங்களில் இறங்கியுள்ளதால், அவரது படத்தை எங்குமே பயன்படுத்த வேண்டாம் என தலைமை உத்தரவிட்டதாகவும், அதன்படியே பேனர்களில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications