கடைசி விநாடி வரை களத்தில் இருந்த பீட்டர் அல்போன்ஸ்.. திடீரென மாற்றப்பட்டது ஏன்?
Recommended Video
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக பீட்டர் அல்போன்ஸ்தான் நியமனம் என உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது திடீரென கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டதால் பீட்டரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படிதான் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டார்.
மேலும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு மாவட்ட தலைவர் பதவியை வழங்கினார். இது இளங்கோவன் குரூப்புக்கு பிடிக்கவில்லை இதனால் முந்தைய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் திருநாவுக்கரசருக்கும் இடையே சுமூக உறவு இல்லாமல் நீடித்து வந்தது. இரு தரப்பு ஆதரவாளர்களும் அண்மையில் வெளிப்படையாகவே அடித்து கொண்டனர்.
முதலிடம் பெற்ற பீட்டர்
திமுக முன்னிறுத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் திருநாவுக்கரசர் ஈடுபாடு காட்டவில்லை என்ற ஸ்டாலினின் அதிருப்தி சோனியா, ராகுல் காதுகளை எட்டியது. இதனால் அவர் விரைவில் மாற்றப்பட்டார் என பேச்சு பரவலாக இருந்தது. இந்நிலையில் அந்த பட்டியலில் பீட்டர் அல்போன்ஸின் பெயர் முதலிடத்தில் இருந்தது.
நாடாளுமன்றத் தேர்தல்
பீட்டரின் தேர்வுக்கு சொல்லப்பட்ட காரணங்களில் அவர் அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியவர். திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த கூட்டணி உறவையும் பேணிக் காக்கக் கூடியவர் என்ற காரணங்கள் இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசரிடம் இது குறித்து கேட்ட போது தலைவர் மாற்றம் குறித்து தனக்கு தெரியாது எனினும், நாடாளுமன்றத் தேர்தல் வரை தானே தலைவராக நீடிப்பேன் என கூறியிருந்தார்.
ஆதரவாளர்கள்
இந்த நிலையில் திடீரென தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டார். பின்னர் பீட்டருக்கு பதிலாக கே எஸ் அழகிரி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் பீட்டரின் ஆதரவாளர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதிகள்
காங்கிரஸ் தலைமையின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன என்று ஆராயப்பட்டபோதுதான் பீட்டரை தேர்வு செய்யாதது குறித்து தெரியவந்தது. அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சியின் கூட்டணியில் இருக்கும் போது மற்றொரு கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அந்த தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்.
குறிப்பிட்ட தொகுதிகள்
ஒரு வேளை அந்த கட்சி கேட்ட தொகுதிகளில் முக்கிய கூட்டணி கட்சிக்கும் ஆதரவு பலம் அதிகமாக இருக்கலாம். இதனால் இழுபறி நீடிக்கவும் வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை சமாதானப்படுத்தி குறிப்பிட்ட தொகுதிகளை வாங்குவதே ஒரு தலைவருக்கு அழகு.
ராகுல் முடிவு
அந்த வகையில் பீட்டரை தேர்வு செய்தால் என்னதான் அவர் திமுகவுடன் நெருக்கமாக இருந்தாலும் தொகுதி பங்கீடு விஷயத்தில் கறாராக கேட்டுப் பெறாமல் காம்பிரமைஸ் செய்து கொள்வார் என்பதால் பீட்டர் அல்போன்ஸை ராகுல் காந்தி தேர்வு செய்யவில்லை என கூறப்படுகிறது.