மதுரையில் எப்படி அழகிரியோ.. திருவாரூரில் காமராஜ்.. தினகரனின் பலே கணக்கு!
எஸ்.காமராஜை வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்க என்ன காரணம் தெரியுமா?
Recommended Video
சென்னை: காரணம் இல்லாமல் காமராஜை வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிப்பாரா என்ன? யார் இந்த எஸ்.காமராஜ், இவரை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
எஸ்.காமராஜ் முதலில் நல்ல மனிதர். அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர். மதுரையில் எப்படி அழகிரியோ, அப்படிதான் திருவாரூரிலும் காமராஜ், எளிமையாக தொண்டர்களிடம் பழகுவார்.
அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர். கடுமையான உழைப்பாளி. தொழிலதிபரும்கூட. மாவட்ட செயலாளராக 15 வருஷத்துக்கும் மேலாக இருந்து வருகிறார். இதனால் இந்த மாவட்டம் இவருக்கு அத்துப்படி. கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். எம்ஏ பிஎட் படித்தவர். கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதெல்லாம் பொதுவான காரணங்கள்தான்.
ஜெயலலிதா அதிரடி
ஆனால் இவரை டிடிவி தினகரன் செலக்ட் செய்ய அடிப்படை மேட்டரே வேற. காமராஜ் ஒரு தீவிரமான சசிகலாவின் அபிமானி. ஒருமுறை சசிகலாவுடனான தனது உறவில் விரிசல் வந்தபோது, அவரை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக யார் இருந்தாலும் விலகி விடுங்கள் என்றும் ஜெயலலிதா அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார்.
ஆதரவு தொடர்கிறது
அப்போது, காமராஜ் நீடாமங்கலம் யூனியன் சேர்மன் பொறுப்பை வகித்து வந்தார். ஜெயலலிதாவிடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்ததும் மனமுவந்து தனது பதவியை ராஜினாமா செய்து, சசிகலாவுக்கான தனது ஆதரவை தெரிவித்தார். அன்றிலிருந்தே இன்றுவரை அந்த குடும்பத்துக்காகவே உண்மையாக இருந்து வருகிறார் காமராஜ்.
வளர்த்த கடா...
ஆனால் காமராஜை ஆரம்ப காலத்தில் வளர்த்து, தூக்கி விட்டது திவாகரன்தான் என்பதுதான் உண்மை. காலப்போக்கில் அவருடனான உறவு சீர்கெட ஆரம்பித்து, வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்றுகூட அன்றைய காலகட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பேசப்பட்டது.
கட்சி மீதான அக்கறை
ஆனால் தனது சேர்மன் பொறுப்பை ராஜினாமா செய்தாலும், மறுநாளே அதிமுக கட்சி நிதிக்காக ஜெயலலிதாவை நேரில் சந்தித்து 25 லட்சம் ரூபாயை வழங்கினார் காமராஜ். அதாவது விசுவாசம் சசிகலாவுக்கு என்றாலும், கட்சி மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தினார். பதவியை தூக்கி எறிந்த ஒருவர், மறுநாள் வந்து நிதியை கொடுத்திருந்தால் வேறு யாராக இருந்தாலும் ஜெயலலிதா வாங்கி இருக்க மாட்டார். ஆனால் காமராஜ் மீதுள்ள தனிப்பட்ட மரியாதை காரணமாக அதனை மனமுவந்து பெற்று கொண்டார்.
தினகரனின் நம்பிக்கை
அதன்பிறகு அடுத்த தேர்தலிலேயே மன்னார்குடி தொகுதியில் போட்டியிட சீட்டும் கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால் டி.ஆர்.பி. ராஜாவிடம் தோற்றதை ஜெயலலிதாவால் ஜீரணிக்கவே முடியவில்லை. "உன் ஊர்ல தோத்துட்டியே?" என்று திவாகரனிடம் ஜெயலலிதா நேரடியாகவே கேட்டுவிட்டார். ஏனென்றால் டிஆர்பி ராஜாவிடம் இவர் தோற்றது வெறும் 8,200 வாக்குகள் தான், எனவே எப்படியும் இவர் ஜெயித்துவிடுவார் என்பது தினகரனின் ஆழமான நம்பிக்கை.
"பசை" உள்ள நபர்
அதுவும் இல்லாமல் எஸ். காமராஜ் "பசை" உள்ள பார்ட்டி என்பதால் தேர்தல் செலவுகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது டிடிவிதினகரன் நன்கு அறிந்த உண்மை. திருவாரூரில் அமமுகவில் பெரிய தலை என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாவிட்டாலும் காமராஜை வேட்பாளராக அறிவிக்க, காமராஜின் தீவிர விசுவாசம்தான் உண்மையான காரணமாக உள்ளது.