"முதுகில் சுமக்கிறோமே.. இது தேவைதான்!" அவர் இப்படி பேசலாமா? கொதிக்கும் திமுக சீனியர்கள்!
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையேயான உறவில் மெல்ல மெல்ல விரிசல் ஏற்பட தொடங்கி தற்போது காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணிக்கு திமுக சீனியர்கள் அழுத்தம் கொடுக்கும் வரை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு கட்சியை தேர்தலில் தோற்கடிக்க பல்வேறு சித்தாந்தங்கள், கொள்கைகளை கொண்ட கட்சிகள் ஓரணியில் இணைவது என்பதுதான் கூட்டணி. அது போல் ஏற்பட்டதுதான் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியாகும்.
இதில் திமுக- காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் நிறைய முறை பிரச்சினைகள் வந்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் காமராஜர் பிறந்தநாளின் போது சென்னையில் காங்கிரஸ் சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது.
இப்படி பண்றாங்களே! சென்னை வரும் மோடியிடம்.. பற்ற வைக்கபோகும் கமலாலயம்.. தப்பு தப்பு! சிக்கலில் திமுக
கராத்தே தியாகராஜன்
அப்போது கராத்தே தியாகராஜன் பேசுகையில் தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் திமுகவிற்காக ஓட்டு போடவில்லை. ராகுல் பிரதமராக வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தனர் என்றார். இது திமுகவினரை கோபமடையச் செய்துவிட்டது. இதையடுத்து கராத்தே கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
திமுக பதிலடி
இதற்கு திமுகவும் பதிலடியை கொடுத்துவந்தது. இந்த சம்பவத்தின்போது ஒரு பேச்சு எழுந்தது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா என கேள்வி எழுந்தது. ஆனால் காங்கிரஸ் ஸ்டிராங்காக திமுக கூட்டணியில் பெவிகால் போட்டது போல் ஒட்டிக் கொண்டது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதனால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் அது நடக்கவில்லை. பல சம்பவங்களில் காங்கிரஸ் கட்சியை திமுக ஒரு சுமையாகவே கருதி அதை மறைமுகமாகவும் கருத்துகளை பதிவிட்டிருந்தது. ஆனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படவில்லை.
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணி
இந்த நிலையில்தான் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் பேசி வந்தனர். இதற்காக அவர்கள் இருவருமே மேற்கண்ட கட்சிகள் ஆளாத மாநில முதல்வர்களிடம் பேசி வந்தனர். அதே போல் தமிழக முதல்வர் ஸ்டாலினிடமும் இந்த பேச்சு எழுந்தது.
காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸை விட்டுவிட்டு ஒரு புதிய அணியை உருவாக்குவதில் அவருக்கு விருப்பமில்லை என சொல்லப்பட்டது. இதனால் அவர் இந்த முடிவுக்கு ஒத்து போகவில்லை என்றே தெரிகிறது. அது போல் தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போதும் மொத்த மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில் காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு மாநகராட்சி பதவியை திமுக விட்டுக் கொடுத்தது. இது பெரியதாக பேசப்பட்டது.
கூட்டணி தர்மம்
அது போல் தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஒரு சீட்டை திமுக ஒதுக்கியுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தாலும் அக்கட்சிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையிலும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பதிலும் திமுக தவறியதே இல்லை என சொல்லலாம். அவ்வாறு ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சியை இழுத்து பிடித்து வந்தது திமுக. அப்படிப்பட்ட நிலையில் பேரறிவாளன் விடுதலையும் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டி தழுவி கொடுத்த தேனீர் விருந்தையும் காங்கிரஸ் கட்சி விரும்பவேயில்லை.
பேரறிவாளன்
பல தருணங்களில் சோனியாவும் ராகுல் காந்தியும் 7 பேரையும் மன்னிப்பதாக கூறிய நிலையிலும் தமிழக காங்கிரஸ் பேரறிவாளன் விடுதலையை விமர்சனம் செய்தது. இதையும் திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அவர்கள் கட்சியின் தலைவரை இழந்திருக்கிறார்கள், அது அவர்களுடைய கொள்கை, சித்தாந்தம் என ரீதியில்தான் திமுக விட்டுக் கொடுத்தது. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்தது. கூட்டணி என்பது ஒரு கட்சியை மேலும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உருவான அரசியல் கூட்டணிகள் தமிழக காங்கிரஸை வளர்ச்சி பெற செய்ய முடியாமல் செய்துவிட்டன.
காங்கிரஸ் பலவீனம்
தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பலவீனப்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை. கூட்டணி அமைத்து காங்கிரஸ் உரிய வளர்ச்சியை பெறவில்லை. காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் வலிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள் என பேசியிருந்தார். இது திமுகவினரை கோபமடையச் செய்துள்ளதாகவே தெரிகிறது.
உள்ளடி வேலைகள்
காங்கிரஸ் கட்சியை ஏற்கெனவே முதுகில் சுமக்க முடியாமல் சுமந்து வருகிறோம். இதில் அனைத்தையும் மறந்துவிட்டு கே எஸ் அழகிரி இப்படி பேசினால் எப்படி என முதல்வரிடம் திமுக மூத்த தலைவர்கள் கொந்தளிக்கிறார்களாம். கோஷ்டி பூசல் காரணமாக தேர்தலில் இவர்கள் கட்சியினரே உள்ளடி வேலைகளைப் பார்த்து இவர்கள் கட்சி வேட்பாளரை தோற்கடிப்பதற்கு திமுக எப்படி பொறுப்பாகும் என்றும் கேள்வி எழுப்பினராம்.
3ஆவது அணி
இதனால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டுவிட்டு மம்தா பானர்ஜி, சரத்பவார், கேசிஆர், நவீன் பட்நாயர் உள்ளிட்டோருடன் 3ஆவது அணியை உருவாக்கலாம் என திமுக மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுக்கிறார்களாம். ஆனால் இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஒவ்வொரு லோக்சபா தேர்தலின் போதும் மூன்றாவது அணி என ஒன்று கணீரென ஒலிக்கும். ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க அது அப்படியே குறைந்துவிடும். அது போல் மூன்றாவது அணி சாத்தியமா என்ற ஒரு விவாதமும் நடைபெறும். அந்த வகையில் திமுகவை பொருத்தவரை காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லை என்றே அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
3ஆவது அணிக்கு சாத்தியமா
அதாவது திமுகவுக்கு டெல்லி ஆதரவு என்பது தேவையான ஒன்றாகிவிட்டது. என்னதான் திமுகவுக்கு லோக்சபையில் 23 எம்பிக்கள் இருந்தாலும் டெல்லி ஆதரவு என்பது தேவை. எனவே காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தமிழகத்தில் இல்லாவிட்டாலும் தேசிய அளவில் தேவை என்கிறார்கள். ஆனால் இன்னும் சிலரோ காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் இணைந்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 250 சீட்டுகளில் வெல்ல வாய்ப்பிருந்தாலும் அந்த மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் மாநில கட்சிகளாகும். எனவே திமுக தேசிய கட்சியான காங்கிரஸை இழக்காது என்றே சொல்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போமே!