பொருளாதாரத்தை வைத்து இடஒதுக்கீடு! அப்போ.. வருங்காலத்தில் சொத்து மதிப்பு உயர்ந்தால் சலுகை ரத்தாகுமா?
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் (EWS) இடஒதுக்கீடு பெற்றவரின் சொத்து மதிப்பும், வருவாயும் வருங்காலத்தில் உயர்ந்தால் அவருக்கான சலுகைகளை மத்திய அரசு திரும்பப்பெறுமா..? என்ற கேள்வி புதிதாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
பலநூறு ஆண்டுகாலமாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் பெற வேண்டும் எனும் சமூகநீதி அடிப்படையில், திராவிட இயக்கம் இடஒதுக்கீடு நடைமுறையை முன்னெடுத்தது. 1927 ஆம் ஆண்டு முதன்முறையாக பிராமணர் அல்லாத சமூக மக்களுக்கு 44% இடஒதுக்கீடு, பட்டியல் இன மக்களுக்கு 8% இடஒதுக்கீடு மற்றும் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், பிராமணர்கள் ஆகிய 3 சமூகங்களுக்கு 16% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
ஆனால், இடஒதுக்கீட்டு நடைமுறைக்கு எதிராக பிராமண சமூக மக்கள் தொடர்ந்த வழக்கில் 1950ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்பட்டது. அந்த வழக்கில் மேல்முறையீட்டில், பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கலாம் என 1951ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இட ஒதுக்கீட்டை அதிகரித்த கருணாநிதி
மு.கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவிலேயே முதன்முறையாக கடந்த 1971ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு என தனி அமைச்சகம் உருவாக்கி, BC பிரிவினருக்கு 25% லிருந்து 31% ஆகவும், SC/ST பிரிவினருக்கு 16% லிருந்து 18% ஆகவும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க ஆணையிட்டார். தொடர்ந்து, 1989இல் MBC பிரிவினருக்கு 20% இடஒதுக்கீடும், இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இடஒதுக்கீடும், அருந்ததியர் மக்களுக்கு 3% இடஒதுக்கீடும் வழங்க அவர் ஆணையிட்டார். மேலும், சட்டநாதன் கமிஷன் பரிந்துரைத்தப்படி ஒன்றிய அரசு இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மண்டல் கமிஷன்
அதன்படி, மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிரதமர் ஆன பிறகு கருணாநிதி, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்தியா முழுவதும் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். பலநூறாண்டுகாலப் போராட்டத்தின் பயனாக, சமூகநீதி அடிப்படையில் கிடைத்த இடஓதுக்கீட்டு முறையை, முன்னேறிய பிரிவினர் கடுமையாக எதிர்த்து, பின்தங்கிய மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை இன்றுவரை பறித்து வருகின்றனர். மண்டல் கமிஷன் பரிந்துரைத்து, ஒன்றிய அரசு அறிவித்த இடஒதுக்கீடு இன்றுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு எதிரானதா?
ஆனால், முன்னேறிய பிரிவில் பொருளாதாரரீதியாக பின்தங்கிய EWS என்ற புதுப்பிரிவை உருவாக்கி, அரசியலமைப்புக்கு எதிராகவும், சமூகநீதிக்கு எதிராகவும் 10% சிறப்பு இடஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்து, 3% மக்கள் 97% உள்ள பெரும்பான்மை மக்களை நசுக்கும் வேலையை மீண்டும் பாஜக தொடங்கியுள்ளது.

சொத்து உயர்ந்தால் எப்படி?
அதாவது, முன்னேறிய பிரிவை சேர்ந்த ஒருவரின் ஆண்டு வருமான ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருந்தாலும், 1000 சதுர அடிக்குக் குறைவாக வீடு வைத்திருந்தாலும், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருந்தாலும், அவர் ஏழ்மையானவராக கருதப்பட்டு, 10% இடஒதுக்கீட்டை பெறுவார். சமூகநீதிக்கு எதிரான பொருளாதார அடிப்படையிலான EWS பிரிவை சேர்ந்த ஒருவரின் ஆண்டு வருவாய் மற்றும் சொத்து மதிப்பு அதிகரித்தால், அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இந்த அரசு திரும்பப்பெறுமா? அல்லது அவர்களே சலுகைகளை திருப்பி வழங்கி விடுவார்களா? என்று சமூக வலைத்தளங்களில் சிலர் விவாதித்து வருகின்றனர். இது அறிவியல்பூர்வமில்லாத ஒரு இட ஒதுக்கீடு முறையாக உள்ளதே, அப்படியிருந்தும், உயர்ஜாதியினருக்காக பிற ஜாதியினரை உள்ளே சேர்க்கால் ஒரு இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதா என்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள். ஏனெனில் ஜாதி பிறப்பால் வருவது.. பொருளாதார நிலை மாறக் கூடியது. மாறும் விஷயத்தை ஒரு அளவுகோலாக நிர்ணயித்து அதில் வெற்றி பெற்று, தங்களது வாக்கு வங்கியாக உள்ள உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களை குஷிப்படுத்தியுள்ளது பாஜக அரசு என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications