"8 மேட்டர்கள்".. புள்ளி வைத்த திமுக.. கனகச்சிதமாக கோலம் போடும் சசிகலா?.. சிக்கலில் எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி கொடநாடு தொர்பாக விசாரிக்க போவதாக தெரிகிறது
சென்னை: கொடநாடு தொடர்பாக, சசிகலாவிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதிமுக மேலிடத்துக்கு குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சிக்கல்கள் பெருகி வருவதாக தெரிகிறது.
2017, ஏப்ரல் 24-ம் தேதிதான் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.. காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், பங்களாவில் இருந்த பணம், பொருள்கள் மற்றும் பல ஆவணங்கள் காணாமல் போயின.
இதற்கு பிறகு இது தொடர்பான வழக்கு விசாரணை மந்த நிலையில்தான் இருந்தது.. தெஹல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ என்பவர், டெல்லியில் தந்த பேட்டி தான், அதிமுக மேலிடத்தின் தலையில் குண்டை வாரி போட்டது.
கொள்ளை நாடகம்
அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் எங்கெல்லாம், எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றவே முதல்வர் எடப்பாடி இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார்.. அந்த ஆவணங்களை வைத்துக்கொண்டே ஓபிஎஸ் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களையும் கைக்குள் வைத்திருக்கிறார்" என்று மேத்யூ சொன்ன வார்த்தைகள் எடப்பாடியை அளவுக்கு அதிகமாகவே உலுக்கி எடுத்துவிட்டன.
எனினும் முதல்வர் என்ற அதிகாரம் கையில் இருந்த நிலையில், கொடநாடு கேஸ் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. தற்காலிக தீர்வை பெற்று தந்தது.. மக்களாலும் இந்த கேஸ் மறக்கப்பட்டது. பிரச்சாரத்தில் சொல்லியது போலவே மீண்டும் திமுக ஆட்சி வந்ததுமே, இந்த வழக்கு தூசி தட்டி எடுக்கப்பட்டது, எடப்பாடிக்கு நெருப்பை அள்ளி கொட்டியது போல் ஆயிற்று.. இப்போது சசிகலாவை அழைத்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
பங்களா
ஜெயலலிதா எப்போது கொடநாடு சென்றாலும், அவருடன் சசிகலாவும் செல்வது வழக்கம் என்பதாலும், பங்களா சசிகலாவின் கன்ட்ரோலில் இருந்ததாலும்தான், இப்போது அவரிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. பங்களாவில் எவ்வளவு பணம் இருந்தது? என்னென் ஆவணங்கள் இருந்தன? லாக்கடர் சாவி உட்பட கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து கொண்டு போனார்களாம் போலீஸ் அதிகாரிகள்..
100 கேள்விகளா?
ஆனால், சசிகலா சரியாக பதில் சொல்லவில்லை என்றே கூறப்படுகிறது.. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் சொன்னாரே, அதுபோலவே, தெரியாது, ஞாபகம் இல்லை என்றே பெருமளவு கேள்விகளுக்கு பதில் சொல்லியதால், அதிகாரிகள் கையை பிசைந்ததாக தெரிகிறது.. ஆனால், அதிகாரிகளின் கேள்விகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாகவும் நேற்று மாலை கூறப்பட்டது.. தொடர்ந்து இன்றும் விசாரணை நடக்கிறது.. சசிகலா என்ன பதில் சொல்ல போகிறாரோ என்ற கிலியில் எடப்பாடி தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது..
எடப்பாடி பழனிசாமி
காரணம், இன்றைய விசாரணை முடிவுபெறும்பட்சத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்திக்க போகிறாராம்.. விசாரணை பற்றியும் பேச போகிறாராம்.. சசிகலா அளிக்கும் பதில்களை அடிப்படையாக கொண்டு எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற யூகங்கள் நேற்று முதலே பரபரத்து வரும் நிலையில், இதுவும் எடப்பாடிக்கு டென்ஷனை எகிற வைத்து வருவதாக தெரிகிறது. இந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமி மீது சந்தேகம் வருவதற்கு சில காரணங்களும் ஏற்கனவே வட்டமடித்தன..
வாக்குமூலம்
குறிப்பாக, சயான் தந்த வாக்குமூலத்தில் எடப்பாடி பெயரை அழுத்தி சொல்லி உள்ளதாக தகவல் வெளியானது.. ஒருவேளை சயான் பொய் சொல்லி இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், கொலை, சில சம்பவங்கள் சந்தேகத்தை கிளப்பியது.. கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிதான்.. ஆனால், நடந்த சம்பவம் குறித்து சங்ககிரி டிவிஷனில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்குதான் முதலில் தெரியவந்துள்ளது.. இவர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவித்தாராம்.. அதாவது, ஆத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவதற்கு முன்பேயே, சங்ககிரி போலீசுக்கு தகவல் எப்படி தெரிந்தது என்பதுதான் கேள்வியே.
வாட்ச் - கடிகாரம்
முதலமைச்சராக இருந்தவரின் பங்களாவில் வெறும் கடிகாரத்தையும் பொம்மையையும் திருட யாரும் நுழைந்திருக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமிக்கே நன்றாக தெரிந்திருந்தும் விசாரணையை முடுக்கி விடாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.. மாத்யூ, சயன், மனோஜ் இவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியும்கூட, எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் சொல்லவில்லை இதுவும் ஏன் என்று தெரியவில்லை.. கொலை கொள்ளை நடந்தவுடன் முதல்வர் முந்திக்கொண்டு ஒன்றும் திருடு போகவில்லை சில வாட்ச்களும் , ஒரு பொம்மையும் திருடு போனது என்று மட்டுமே அவர் அறிவித்தார்.
மனோஜ்
ஆனால், தான் ஆட்சியில் இருந்தவரை, இந்த கொலை, கொள்ளை சம்பந்தமாக வழக்கை சரியாக முடிக்கவே இல்லை என்பதுதான் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. தன்மீது திட்டமிட்டு திமுக வீண் பழியை சுமத்துகிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படியானால், இவர் முதல்வராக இருந்தபோதே, அதுவும் தன்னுடைய பெயரை சயானும் மனோஜும் வாக்குமூலத்தில் தெரிவித்தவுடனேயே, சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தால், இந்த அளவுக்கு சந்தேகத்திற்கு ஆளாகி இருக்க மாட்டாரே..
சந்தேகம்
ஏன் சிபிஐ உதவியை நாடவில்லை? எடப்பாடி பழனிசாமியின் பதற்றமும், பீதியும் நிறைந்த அவரது செயல்பாடுகள்தான், இந்த சம்பவத்தின் மிக முக்கிய சந்தேகத்தை அவர்மீது கிளப்பி உள்ளன என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது... இப்படி எத்தனையோ சந்தேகங்களும், யூகங்களும் எடப்பாடி தரப்பில் இருந்தாலும், சசிகலா இன்று சொல்லப்போகும் வாக்குமூலமும் மிக முக்கியமாக எதிர்நோக்கப்படுகிறது.. சந்தேகங்களின் முடிச்சுகளை எடப்பாடி தரப்பு அவிழ்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டது என்றே தெரிகிறது..!