என்னது.. பழனியப்பன் திமுகவுக்குப் பாயப் போறாரா.. அமமுகவில் அடுத்த பரபரப்பு!
Recommended Video

சென்னை: அமமுகவிலிருந்து அடுத்தபடியாக அண்ணன்.. என்று மைக் வச்சு சொல்லாத குறையாக பலரும் பிய்த்துக் கொண்டு ஓடிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பழனியப்பன் பெயரும் தற்போது இதில் அடிபடுகிறது.
அதிமுகவில் இருந்து தனித்து விடப்பட்ட தினகரன் அமமுகவை ஆரம்பித்தபோது அவருக்கு கொஞ்சம் கிரேஸ் இருந்தது. இதனால் அதிமுகவில் பதவி கிடைக்காதவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி மீது வெறுப்பில் இருந்தோர் எல்லாம் அமமுக பக்கம் தாவினர். அவரை நம்பி 18 எம்.எல்.ஏக்களும் சில எம்.பி.க்களும் கூட வந்தனர். அவரை நம்பி வந்த அத்தனை எம்.எல்.ஏ.க்களின் பதவியும் பறிபோக இப்போது அவர்கள் என்ன செய்வதென்று விழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த நாஞ்சில் சம்பத் முதலில் வெளியேறினார். அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியேறி திமுகவில் பதவியும் பெற்றுகொண்டார். இனிமேல் அமமுகவில் இருந்தால் எதிர்காலம் இல்லை என்பதை அறிந்த செந்தில் பாலாஜி நேரம் பார்த்து திமுகவில் இணைந்து விட்டார். அவர் திமுகவில் இணைந்தபோது அவருக்கு திமுகவில் சில அசைன்மென்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளது அதாவது அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளை திமுக பக்கம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அந்த அசைன்மெண்ட்.

செந்தில் பாலாஜி வேலை
இதை ஏற்றுகொண்ட செந்தில் பாலாஜி முதலில் தனது மாவட்டத்தில் இருந்து இந்த வேலையை தொடங்கியுள்ளார். தனது மாவட்டத்தில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரையும் தனது முயற்சியால் திமுகவில் கொண்டு சேர்த்த அவர் அடுத்ததாக சசியின் உறவினரும் அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான கலைராஜனை திமுக பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளார். அந்த திட்டத்தின்படி கலைராஜனும் நேற்று திருச்சியில் வைத்து ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து விட்டார்.

கலைராஜன்
கலைராஜன் கட்டப் பஞ்சாயத்துக்கு பெயர் போனவர். இதனால்தான் கடந்த முறை இவருக்கு சீட் வழங்காமல் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் சசியின் அழுத்தத்தால் இவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படவில்லை. இப்படி சசிகலாவுடன் நெருக்கமாக இருந்த கலைராஜனையே செந்தில் பாலாஜி திட்டமிட்டு திமுக பக்கம் கொண்டு போய் சேர்த்து விட்டார்.

தர்மபுரி பழனியப்பன்
இந்நிலையில் தினகரனுடன் நெருக்கமாக இருப்பவரும் அமமுகவின் தருமபுரி மக்களவை வேட்பாளருமான பழனியப்பனுக்கு அடுத்தக் குறி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவை பொறுத்தமட்டில் மேற்கு மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகியவற்றில் குறிப்பிடும்படியான வாக்கு வங்கி இல்லை என்பதோடு குறிப்பிடத்தக்க தலைவர்களும் இல்லை. இதனால் திமுக எப்போதும் அந்த திசையில் திக்கி திணறியே வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றவரான பழனியப்பனை திமுக பக்கம் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது.

அவர் வருவாரா
இந்த அசைன்மென்ட் இப்போது செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை எப்படியும் நிறைவேற்றுவதில் செந்தில் பாலாஜி தீவிரமாக உள்ளார். பழனியப்பன் திமுக பக்கம் வந்துவிட்டால் மாவட்ட செயலாளர் பதவி உறுதி என்றும் திமுக ஆட்சியில் அமைச்சர் பதவியும் உண்டு என்று டீல் பேசப்பட்டுள்ளது. ஆனால் பழனியப்பன் வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிமிடம் வரை பழனியப்பன், தினகரனுடன்தான் இருக்கிறார். இன்றும் கூட தேர்தல் அறிக்கை வெளியீட்டில் தினகரன் பக்கத்திலேயேதான் இருந்தார். ஆனால் அரசியலாச்சே.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.












Click it and Unblock the Notifications