என்ன அணில்கள் மூலம் மின்தடை ஏற்படுமா? எப்படி?.. அமைச்சர் செந்தில் பாலாஜி கூற்று உண்மையா.. இதை படிங்க
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சின்ன சின்ன மின்வெட்டு நடப்பதற்கு என்ன காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு இருந்தார். இதில் அணில்கள் குறித்து செந்தில்பாலாஜி குறிப்பிட்ட விஷயம் வைரலாகி வருகின்றது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில ஊர்களில் அவ்வப்போது 5 நிமிடம், 10 நிமிடம் என்று மின்சார தடை ஏற்படுகிறது. சில மாவட்டங்களில் மின் தடை பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்னொரு சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படும் இந்த சிறிய அளவிலான மின்தடைக்கு என்ன காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம்
அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், மின்வெட்டு பிரச்சனையை செய்து வருகிறோம். கடந்த டிசம்பருக்கு பின் முந்தைய அரசு பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. மரங்கள், செடிகளை அகற்றவில்லை. தேர்தலை மனதில் வைத்து பராமரிப்பு பணிகளை செய்யவில்லை.
எப்படி?
இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. அதேபோல் அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
கிண்டல்
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த விளக்கம் இணையத்தில் வைரலானது. அணில் மூலம் மின்சார தடையா என்று பலரும் இணையத்தில் கேள்வி கேட்டனர். இதை வைத்து பல மீம்களும் கூட போடப்பட்டது. இந்த விளக்கம் பெரிய சர்ச்சையான நிலையில், உண்மையில் அணில் மூலம் மின்தடை ஏற்படுமா என்று தேடிப்பார்த்தோம்.
மின்தடை
அதன்படி உலகம் முழுக்கவே அணில்கள் மூலம் மின்தடை ஏற்படுவது இயல்பான விஷயமாக இருக்கிறது. மின்கம்பிகளில் அணில்கள் செல்லும் போது, இரண்டு கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, இரண்டு கம்பிகளும் இணைந்து அதன் மூலம் மின் தடை ஏற்படுகிறது. பல்வேறு நாடுகளில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. முக்கியமாக பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் நடந்துள்ளது.
கரோலினா
அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய மின்தடை பிளாக் அவுட்டிற்கு அணில்கள்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் லெக்சிங்டன் கவுண்டியிலும் இதேபோல் அதிக முறை அணில்கள் மூலம் மின்தடை ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் தாக்குதல் மூலம் உலகில் ஏற்படும் மின்தடையை விட அணில்கள் மூலமே அதிகமாக மின்தடைகள் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிகின்றன.
பவர் கிரிட்
பல்வேறு நாடுகளில் பவர் கிரிட்களில் அணில்கள் செல்வதால் கிரிட் லைன்கள் உரசி மின்தடை ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சராசரியாக ஒரு வருடத்திற்கு சராசரியாக 100- 150 முறை 24க்கும் மேற்பட்ட மாகாணங்களில் அணில்கள் மூலம் மின்தடை ஏற்படுத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 1987ல் அமெரிக்காவின் பங்கு மார்க்கெட்டான நாஸ்டாக்கில் அணில்கள் மூலம் மின்சார தடை ஏற்பட்டது.
90 நிமிடம்
நாஸ்டாக்கில் உள்ள மின் வயர்களில் அணில்கள் காரணமாக 90 நிமிடம் மின்தடை ஏற்பட்டது. இதனால் 20 மில்லியன் டிரேடிங் பாதிக்கப்பட்டது. பின் 2014ல் இதேபோல் அணில்கள் மூலம் ஏற்பட்ட மின்சார தடை காரணமாக நாஸ்டாக்கில் 30 நிமிடம் பங்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. எல்லோரும் இது சைபர் அட்டாக் என்று நினைத்த நிலையில், கடைசியில் அணில் மூலம் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாடு
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இதேபோல் அணில்கள் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால், மின்தடை ஏற்பட தொடங்கி உள்ளது. தேர்தல் நாளின் போதே, கோபிச்செட்டிபாளையத்தில் அணில் காரணமாக மின்தடை ஏற்பட்டு, வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இரண்டு மின் வயர்களை அணில் உரசியபடி (தேர்தலை நிறுத்திய வீரதீர அணில் அங்கேயே இறந்துவிட்டது) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின் அகற்றப்பட்டது.
தொடர்கிறது
தற்போது மரங்கள் வளர்ந்து இருப்பதால் அதன் மூலமாக அணில்கள் மின் கம்பிகளுக்கு சென்று மின்சார தடை ஏற்பட காரணமாக இருக்கின்றன. இதுவே சிறு சிறு மின்தடை ஏற்பட காரணமாக உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின் தமிழ்நாட்டில் மின்தடை மொத்தமாக நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.