தேசிய மொழியே இல்ல.. “இந்தி திணிப்புக்கு” சவுக்கடி! அனல் பறக்கும் நித்யா மேனன் திரைப்பட காட்சி
சென்னை: பெங்களூரு டேய்ஸ் பட இயக்குநர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வொண்டர் வுமன் திரைப்படத்தில் இந்தி திணிப்புக்கு எதிராகவும் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் தொடர்பாகவும் இடம்பெற்று உள்ள வசனங்கள் விவாதப் பொருளாகி இருக்கிறது.
உஸ்தான் ஹோட்டல் திரைப்படத்தின் கதாசிரியரும், பெங்களூரு டேஸ் திரைப்படத்தின் இயக்குநருமான அஞ்சலி மேனன் வொண்டர் உமன் என்ற புதிய திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த திரைப்படம் தாய்மை, கர்ப்பிணி பெண்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாப்பிலும் வந்தாச்சு.. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை எப்போது?.. பாமக ராமதாஸ் கேள்வி
முன்னணி நாயகிகள்
மகப்பேறு காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய வகுப்பில் கலந்துகொள்ளும் 6 பெண்களின் கதை இது. இதில் கர்ப்பிணிகளாக நித்யா மேனன், பார்வதி திருவோடு, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி, சயனோரா பிலிப் உள்ளிட்டோ நடித்து இருக்கின்றனர். முன்னணி நாயகிகள் நடித்துள்ளதால் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
காட்சிகள்
இந்த படத்தில் நடிகை நதியா நடத்தி வரும் மகப்பேறு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மற்ற நடிகைகள் பெண்ணியம், ஆணாதிக்கம், குடும்பவியல், கர்ப்பக கால சிக்கல்கள், இந்தித் திணிப்பு, தென்னிந்திய மொழிகள் குறித்து பேசிக்கொள்வதை போன்ற பல காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
இந்தி திணிப்பு
இதில் இந்தி திணிப்பு தொடர்பான காட்சிதான் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது. கேரளாவில் நடைபெறுவதைபோல் படமாக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் மராத்தி பெண்ணாக நடித்து இருக்கும் நடிகை அம்ருதா சுபாஷ், தனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் இந்தியில் பேசுங்கள் என்று கூறுகிறார்.
இந்தி தேசிய மொழியா?
அப்போது மற்றொரு நடிகையான சயனோரா பிலிப் இந்தியா நஹி மாலும் என்று கூறுகிறார். உடனே அம்ருதா சுபாஷ், இந்தி தேசிய மொழிதானே என்று கேட்க, தமிழ் பெண்ணாக நடித்து இருக்கும் பத்மபிரியா ஜானகிராமன், இந்தி, ஆங்கிலம் எல்லாம் அதிகாரப்பூர்வ மொழிதான். தேசிய மொழி இல்லை.
தென்னிந்தியர்கள்
அப்போது மற்றொரு நடிகை, அனைவரும் தென்னிந்தியர்கள்தானே. எதற்கு இந்தியில் பேச வேண்டும் என்று கேட்கிறார். தென்னிந்திய கதையை எடுத்து இந்தி படம் உருவாக்கியதைபோல் இருக்கும். இதனால் திணறிப்போகும் அம்ருதா சுபாஷ், "தென்னிந்தியர்கள் மதராசிதானே பேசுவீர்கள்." என்றார்.
மதராசி இல்லை
இதனை கேட்கும் பத்மபிரியா, "மதராசியா? நாங்க எல்லாம் வீட்டில் தமிழ் பேசுவோம்." என்று சொல்ல, அம்ருதா சுபாஷ், "தமில்" என்று தவறாக உச்சரிக்க, "தமிழ்., ழ.. ழ.." என்று பத்மபிரியா உச்சரிப்பை சொல்லிக் கொடுத்தார். உடனே சயனோரா, "மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, துளு.." என்று தென்னிந்திய மொழிகளை சொல்லிக் காட்டி "மதராசி என்ற மொழியே இல்லை" என்றார்.
நித்யா மேனன்
அப்போது நித்யா மேனன் தென்னிந்தியாவும் இந்தியாவில்தான் இருக்கிறது என்று கூறினார். இந்த காட்சியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இந்தி திணிப்பு எதிரான குரல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வலுத்து வருகிறது.
ரசிர்கள் வரவேற்பு
இந்த நிலையில் வொண்டர் உமன் திரைப்படத்தில் முன்னணி நாயகிகள் இந்தி திணிப்பு எதிராகவும், தென்னிந்திய மொழிகள் தொடர்பாகவும் பேசும் காட்சி முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக மலையாள படத்தில் தமிழ் குறித்து இடம்பெற்று இருக்கும் காட்சிகளை வைத்ததற்காக இயக்குநர் அஞ்சலி மேனனை தமிழர்கள் பாராட்டி வருகிறார்கள்.