துப்பாக்கி முனையில் வேலை.. முடிக்காவிட்டால் தண்டனை..மியான்மரில் சித்ரவதை அனுபவித்த தமிழர்கள்
சென்னை: ஐடி வேலை என்று அழைத்துச்சென்று மியான்மரில் சட்டவிரோத வேலைக்காக அழைத்துச்சென்றதாக மியான்மரில் இருந்து மீண்டு வந்த 13 தமிழர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். துப்பாக்கி முனையில் பல மணி நேரம் வேலை செய்ததாகவும் மன ரீதியான சித்ரவதைக்கு ஆளானதாகவும் சென்னை திரும்பியவர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
குடும்ப சூழ்நிலையால் வெளிநாட்டிற்கு வேலை சென்ற பலர் பல வித சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு ஐடி வேலைக்காக வேலைக்கு சென்றவர்கள் பலர் சட்டவிரோதமாக மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு பலவித கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
துபாயில் வேலைக்காக விண்ணப்பித்தவர்களை சட்டவிரோதமாக மியான்மருக்கு அழைத்து சென்றிருக்கிறார் ஏஜென்ட். அங்கு பல மணி மணிநேரம் வேலை செய்ய வைத்து சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளதாக மீண்டவர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
பல மணி நேர வேலை..முடிக்காவிட்டால் தண்டனை.. மியான்மரில் இருந்து மீண்ட தமிழர்கள் கண்ணீர்
சென்னை திரும்பிய தமிழர்கள்
மியான்மரில் சிக்கித்தவித்த தமிழர்கள் மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சிகளினால் மீட்கப்பட்டனர். இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று தாயகம் அழைத்து வரப்பட்டனர். தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவர்களிடம், குடிவரவுத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தமிழகத்தில் இருந்து சென்ற அதிகாரிகள் விளக்கம் அளித்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். நள்ளிரவில் அனைவரும் சென்னை திரும்பினர்.
ஏமாற்றிய ஏஜென்ட்
மியான்மரில் இருந்து தமிழ்நாடு வந்தடைந்த கோவையை சேர்ந்த ஒருவர் பதற்றம் தணியாமல் பேசினார். "நாங்கள் துபாயில் வேலைக்கு விண்ணப்பித்தோம். அப்போது தாய்லாந்தில் வேலை இருப்பதாக துபாய் ஏஜென்ட் எங்களிடம் கூறினார். அதை நம்பி அங்கு சென்றபோது எங்களுக்கு வேலை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும் அங்கிருந்தவர்கள் எங்களை ஒரு இடத்தில் வைத்திருந்தனர்.
ஆற்றை கடந்து பயணம்
எங்களை படகு முலம் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து, ஒரு சீன மக்கள் குழு எங்களை சட்டவிரோதமாக ஒரு ஆற்றைக் கடக்கச் செய்தது. இதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.
பல மணி நேரம் வேலை
நாங்கள் மியான்மரில் இருப்பது பின்னர் எங்களுக்குத் தெரிந்தது. எங்களிடம் விசா இல்லை. சட்டவிரோதமாக அங்கு இருந்தோம். எப்படியோ தூதரகத்திற்கு தகவல் அனுப்பினோம். உள்ளூர் ராணுவம் எங்களை காப்பாற்றியது. நாங்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டோம்; ஒரு நாளைக்கு 15-16 மணி நேரம் வேலை செய்தாலும் பணியை முடிக்காவிட்டால் கடுமையான தண்டனைக்கு ஆளானோம். எங்களைப் போல பலர் அங்கு சிக்கியுள்ளனர். நிறைய பேர் வெவ்வேறு முகவர்கள் மூலம் வந்தனர் என்று பாதிக்கப்பட்டவர் கண்ணீர் மல்க கூறினார்.
மோடிக்கு தமிழிசை நன்றி
மியான்மரில் சிக்கி தவித்த தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தோர் தற்போது மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் 13 பேர் தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.அவர்களை மீட்க தொடர் முயற்சி எடுத்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெலுங்கான ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அங்கு சிக்கியுள்ள மற்றவர்களையும் மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை விரைவில் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவர் என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.