ஒபிஎஸ் பிரசாரம் செய்தால் அனுமதிப்பீர்களா? வந்து விழுந்த கேள்வி.. ஜெயக்குமார் பதிலை பாருங்க
உள்கட்சி விஷயங்களில் பாஜக தலையிட்டது இல்லை. ஆனால் தோழமை கட்சி என்ற அடிப்படையில் கருத்துக்கள் சொல்லலாம் என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னை: அதிமுக வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கும் கடிதம், இமெயில், வாட்ஸ் அப் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ஒபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்தன. அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்தார். இதனால், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அதிமுக வேட்பாளர் தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு பெற அதிமுக தலைமை முடிவு செய்தது.

ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம்
அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசை பூர்த்தி செய்து இன்று இரவு 7 மணிக்குள் ஒப்படைக்குமாறு, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி ஓபிஎஸ் தரப்பினருக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மெசேஜ் கொடுத்துள்ளோம்
இந்த நிலையில்,சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- அதிமுக வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்பீடு போஸ்டிலும் அனுப்பியிருக்கிறோம். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வாட்ஸ் அப் மூலமாக மெசேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. அவருடைய இமெயிலில் இருந்து மெசேஜ் கொடுத்துள்ளோம். கடிதத்தை நேரடியாகவும் தலைமைக்கழக ஊழியர்கள் கொடுத்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை 100 சதவீதம் முழுமையாக பின்பற்றியிருக்கிறோம்.

நான் சொல்லும் அட்வைஸ்
ஓபிஎஸ் போட்டு இருக்கும் வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜகவும் உள்ளது. 7 ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். எனவே அதற்குள் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படிதான் எல்லோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவைத்தான் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும். அதுதான் அவர்களுக்கும்(ஒபிஎஸ் தரப்பு) நான் சொல்லும் அட்வைஸ்.

எங்கள் கட்சியின் விருப்பம்
உள்கட்சி விஷயங்களில் பாஜக என்றுமே தலையிட்டது இல்லை. ஆனால் தோழமை கட்சி என்ற அடிப்படையில் கருத்துக்கள் சொல்லலாம். கருத்துக்களே சொல்லக் கூடாது என்று யாரையும் சொல்ல முடியாது. கருத்துக்கள் என்பது வேற தலையீடு என்பது வேற. கருத்துக்களை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் எங்கள் கட்சியின் விருப்பம். கருத்தே நீங்கள் சொல்லக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளது. இப்போதைக்கு அந்த தீர்ப்பை செயல்படுத்துகிறோம்" என்றார்.

முடிவு செய்ய வேண்டியது கட்சிதான்
அப்போது ஓபிஎஸ் இரட்டை இலை வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தால் நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "7 ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் கேட்கும் விஷயம் குறித்து முடிவு செய்ய வேண்டியது கட்சிதான்" என்றார்.












Click it and Unblock the Notifications