கோயில் திருப்பணி.. ரூ 3 லட்சம் மேல் வசூலித்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்.. காவல் துறை வாதம்
சென்னை: பாஜக ஆதரவாளரும், யுடியூபருமான கார்த்திக் கோபிநாத் கோவில் திருப்பணி என்ற பெயரில் தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர் பியூஷ்மனுஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் ஆகியோர் பாஜக ஆதரவாளரும், யுடியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர்.

கார்த்திக் கோபிநாத்
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரிய கார்த்திக் கோபிநாத் மனுவையும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல்துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில் பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறையும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்
அப்போது, பூந்தமல்லி நீதிமன்றம் ஏற்கனவே கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைத்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது விசாரணை நடத்தினார். அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், மிலாப் ஆப் கணக்கு மற்றும் தன் தனிபட்ட வங்கி கணக்கில் வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

வங்கிக் கணக்கு
தனது தனிப்பட்ட வங்கி கணக்கின் மூலம் கோவில் திருப்பணி என்ற பெயரில் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக சுட்டிக் காட்டினார். மிலாப் ஆப் மூலம் வசூலித்தது தவறு என்றும் போலீஸ் காவல் கேட்கப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

28 லட்சம்
கார்த்திக் கோபிநாத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி கடந்த முறை 28 லட்சம் என்று தெரிவித்து விட்டு தற்போது 3 லட்சம் என குறிப்பிடுவதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வங்கிக் கணக்கு விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications