மகாலட்சுமி மாதிரி இருக்க.. குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்யணும்.. பாட்டிகளை குறிவைத்து நகை திருட்டு
சென்னை: குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என கூறி மூதாட்டிகளிடம் இருந்து நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 27 நாட்களில் 15 திருட்டு சம்பவங்கலில் ஈடுபட்டவர் இவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்த நபர் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து திருட்டை அரங்கேற்றி வந்தார்.
குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்தால் தங்க மோதிரம் கொடுப்பதாக கூறி மூதாட்டிகளின் கவனத்தை திசை திருப்பியுள்ளார்.
காதில் விழலையா
கடந்த மாதம் 23-ஆம் தேதி மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் ராயப்பேட்டையை சேர்ந்த 65 வயது மூதாட்டி ரவணம்மா. இவரை மர்மநபர் ஒருவர் அழைத்துள்ளார். மூதாட்டியும் கவனிக்காமல் நடந்து சென்றுள்ளார். அப்போது அருகில் வந்த அந்த நபர் கூப்பிடுவது காதில் விழவில்லையா என கேட்டுள்ளார்.
மூதாட்டி
பின்னர் தனது உறவினர் வீட்டு குழந்தைக்கு பிறந்தநாள், உங்களை பார்ப்பதற்கு நன்கு ஆண்டு அனுபவித்தவர் போல் தெரிகிறது. நீங்கள் வந்து வாழ்த்தினால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டியும் அவர் சொல்லும் இடத்திற்கு பின்னால் சென்று கொண்டிருந்தார்.
மனம் குளிரும்
அப்போது ஒரு இடத்தில் மூதாட்டியை அமர வைத்த அந்த இளைஞர், குழந்தையை அழைத்து வருவதாக கூறி ஒரு மாடி படி ஏறியுள்ளார். உடனே கீழே இறங்கிய அந்த இளைஞர், எங்கள் உறவினர் பணக்காரர், நீங்கள் அவர் மனம் குளிரும் படி வாழ்த்தினால் தங்க மோதிரம் கொடுப்பார்.
மூதாட்டி புகார்
ஆனால் நீங்கள் கையில் ஏற்கெனவே 3 மோதிரங்களை போட்டுள்ளீர்கள், அதை பார்த்தால் அவர்கள் கொடுக்கமாட்டார்கள். எனவே கழற்றி என்னிடம் கொடுத்துவிட்டு காத்திருங்கள் என கூறிய அந்த நபர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து மூதாட்டியின் புகாரின் பேரில் அந்த நபரை தேடி வந்தனர்.
35 இடங்களில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு
மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ் பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டிகளை குறிவைக்கும் திருடர் தொடர்பான காட்சிகள் இருந்தன. திருடனை ஆய்வு செய்ததில் பழைய குற்றவாளியான கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பது தெரியவந்தது.
40 கிராம் தங்க நகை
இவர் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை கைது செய்ய சென்ற போது திருமலை தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து ஒரு வாரமாக தனிப்படை போலீஸார் கல்லறை தோட்டத்தில் பதுங்கியிருந்த நிலையில் நேற்று வந்த அவரை போலீஸார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இவரிடம் இருந்து 40 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.