கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் அருகே விரைவு ரயில் மோதியதில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த 3 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் மோதியல் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை மற்றும் 2 குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன.
தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் பலியானது குறித்து ரயில் ஓட்டுநர் மற்றும், உதவியாளரிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை வனச்சரகம்
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் அருகே க.க.சாவடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நவக்கரை பகுதியில் ரயில் பாதை செல்கிறது. இது தமிழக கேரள எல்லையின் வனப்பகுதி என்பதால் நாள்தோறும் வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் இருக்கும் என்றும் இங்குள்ள தண்டவாளத்தை வனவிலங்குகள் கடந்து செல்வது சாதாரணம் என்றும் கூறப்படுகிறது.

யானைகள் தூக்கி வீசப்பட்டன
ரயில் வருவதை அறியாத யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. இரவு நேரம் என்பதால் ஓட்டுநருக்கும் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றது தெரியவில்லை. மிக சொற்ப தூரமே இருக்கும் நேரத்தில் யானைகள் தண்டவாளத்தை கடந்ததை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் ஓட்டுநரால் ரயிலின் வேகத்தை குறைக்க முடிந்ததே தவிர நிறுத்தமுடியவில்லை. இதனால் வேறு வழியின்றி யானைகள் மீது ரயில் மோதும் நிலை ஏற்பட்டது.

3 யானைகள் பரிதாப பலி
இந்த விபத்தில் 3 யானைகளும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். துரதிர்ஷ்டவசமாக சற்று நேரத்தில் 3 யானைகளும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. இதில் ஒரு யானையின் உடல் தண்டவாளத்திலேயே கிடந்தது. ரயில் வாளையாறை-மதுக்கரை இடையே நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் அடர்ந்த வனப்பகுதியில் வரும்போது விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்த ரயிலை மெதுவாக நிறுத்திய ஓட்டுநர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையின் உடலை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

ஓட்டுநர், உதவியாளரிடம் விசாரணை
பின்னர் பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரயில் எஞ்சின் பறிமுதல் செய்யப்பட்டு மாற்று எஞ்சின் பொருத்தி சென்னைக்கு ரயில் அனுப்பி வைக்கப்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பிற்கு பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. யானைகளின் உடல்களை மீட்ட வனத்துறையினர் உடற்கூறு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில் ஓட்டுநர் சுபயர், அவரது உதவியாளர் அகிலிடம் வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்காணிப்பு கோபுரம் வேண்டும்
வனப்பகுதி என்பதால் ரயில்களை குறைவான வேகத்தில் இயக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிவேகத்தில் இயக்கப்படுவதால் வினவிலங்குகள் இப்படி அநியாயமாக உயிரிழந்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க கோபுரம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்

எவ்வளவு யானைகள் உள்ளன?
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் காடுகளில் 50,000-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்த நிலையில் 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 31,368 யானைகள் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில் மின்சாரம், ரயில் விபத்து, விஷம் வைத்தல், வேட்டை போன்ற அசம்பாவித சம்பவங்களில் 2500க்கும் மேற்பட்ட, அதாவது 70 சதவிகிதத்திற்கும் மேலான யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 101 யானை வழித்தடங்கள் உள்ள நிலையில், யானைகள் உணவுக்காக 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications