எஸ்.பி.வேலுமணி மீதான ரெய்டில் 32.98 லட்சம்.. 1.2 கிலோ தங்கம்.. சிக்கிய 312 ஆவணங்கள்.. பரபர அறிக்கை!
கோவை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டில், ரூ.32.98 லட்சம் ரொக்கம்,1228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள எல்.இ.டி விளக்கு டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
“எனக்கு நெருக்கமாம்.. அட.. யார்னே தெரியாதுங்க” - ரெய்டு பற்றி ஒரே போடாகப் போட்ட எஸ்.பி.வேலுமணி!
ரெய்டில் சிக்கிய வேலுமணி
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தற்போது தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏவாக உள்ளார். வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது தன் அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, தமிழகம் முழுவதும் 58 இடங்களில் சோதனை நடத்தி, 13 லட்சம் ரொக்கம், தங்க நகை, ஆவணங்களை கைப்பற்றினர்.
எல்.இ.டி டெண்டர் முறைகேடு
இந்த நிலையில், மீண்டும் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, எல்இடி விளக்குகள் டெண்டர் விட்டதில், அரசுக்கு 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் இறங்கினர். அதைத் தொடர்ந்து, வேலுமணி, அவரது நண்பர்கள் சந்திர பிரகாஷ், சந்திர சேகர், உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பரபர சோதனை
அதன்படி இன்று காலை கோவை, சுகுணாபுரம் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணி வீடு, அவருக்கு சொந்தமான இடங்கள், வேலுமணியின் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள், பினாமி நிறுவனங்கள் என சென்னையில் 10 இடங்கள், கோவையில் 9 இடங்கள் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி என 31 இடங்களில் சோதனை நடத்தினர்.
8 மணி நேரம்
கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் காலை 6 மணிக்கு துவங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது. கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சுமார் 8 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
32 லட்சம் ரொக்கம் சிக்கியது
இந்நிலையில் தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கப் பணம், 1228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
316 ஆவணங்கள் சிக்கின
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் இவ்வழக்கு விசாரணையில் உள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. எஸ்பி வேலுமணி, ரெய்டில் பெரிதாக எதையும் கைப்பற்றவில்லை எனக் கூறிய நிலையில், இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.