கோவை சிங்காநல்லூரின் பல கஷ்டம் தீரப்போகிறது.. ரூ.180 கோடிக்கு திருத்தப்பட்ட வடிவில் மேம்பாலம்
கோவை: கோவை சிங்காநல்லூரில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. அதேபோல் பல்வேறு மாவட்ட மக்கள் வந்து போகும் இடமாக சிங்காநல்லூர் இருப்பதால் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 20 வருடங்களில் பெரிய அளவில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிங்காநல்லூர் மேம்பாலம் அமைக்க ரூ.180 கோடியில் திருத்திய மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் அவினாசி சாலைக்கு அடுத்தபடியாக அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த இடங்களில் ஒன்றாக திருச்சி சாலை இருக்கிறது. திருச்சி சாலை என்பது மதுரை உள்பட தென்மாவட்டங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது. திருச்சி சாலையில் சிங்காநல்லூர் சந்திப்பு முக்கியமான இடம் ஆகும், ஒருபக்கம் ஒண்டிப்புதூர் சூலூர் செல்லும் சாலையும், மறுபக்கம் உக்கடம் காந்திபுரம் செல்லும் சாலையும். இந்த பக்கம் பீளமேடும், அப்படியே எதிர்புறம் வெள்ளலூரும் இருப்பதால் நெரிசல் மிகுந்த இடமாக இருக்கிறது.

நான்கு முனை சந்திப்பான சிங்காநல்லூர் சந்திப்பில் 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் மட்டுமின்றி எப்போதும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினமும் சிரமப்பட்டு வருகிறார்கள். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் வெளியூர் பேருந்துகள் திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர் நோக்கி திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. என்ன தான் இதற்கு தீர்வு காண யூடேர்ன் வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்ட போதிலும் போக்குவரத்து நெரிசல் இன்று வரை குறையவில்லை.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சிங்காநல்லூர் சந்திப்பு பகுதியில் திருச்சி ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022-ம் ஆண்டு ரூ.110 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. கோவை என்.எஸ்.ஆர் சாலை - சிவானந்தா காலனி சாலை சந்திப்பு, சரவணம்பட்டி - காளப்பட்டி சாலை ஆகியவற்றிலும் மேம்பாலங்களுடன், சிங்காநல்லூர் சந்திப்பிலும் மேம்பாலம் கட்ட ஒப்பந்தப் புள்ளி அப்போது கோரப்பட்டது. ஆனால் இந்த பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறலாம் என்று கருதியதாலும், திட்ட மதிப்பீடு செலவு கூடுதலாகும் என்று கருதியும் 5 முறை ஏலம் விடப்பட்டும் யாரும் ஒப்பந்தம் கோரவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே மெட்ரோ ரயில் திட்டம் முதல்கட்டமாக சத்திரோடு, அவினாசி ரோடு பகுதியில் நடைபெறும் என்றும், திருச்சி ரோட்டில் மெட்ரோ ரயில் திட்டம் தற்போது செயல்படுத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த மேம்பால பணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் சிங்கநல்லூர் பாலத்துடன் அறிவிக்கப்பட்ட கோவை சாய்பாபாகாலனி பகுதியில் மேம்பால பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்காநல்லூரிலும் மேம்பால பணிகள் தொடங்கவில்லை.. இந்நிலையில் மேம்பால பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மெட்ரோ பணிக்காக சிங்கநல்லூர் பால பணியை ரத்து செய்யக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து சிங்காநல்லூர் பகுதியில் கூடுதல் நிதியுடன் ரூ.180 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் தற்போது சமர்ப்பித்துள்ளது. இதுதவிர மேம்பால வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருத்திய மதிப்பீடுக்கு ஒப்புதல் கிடைத்த பின்னர் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகளை தொடங்க மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கூறியுள்ளனர்.
சிங்காநல்லூர் பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டால் மட்டுமே, அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என்பதால் பாலம் கட்டுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவையில் சிங்காநல்லூரில் உள்ள உழவர் சந்தையில் இருந்து தொடங்கி ஜெய் சாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கான இறுதி ஒப்புதல், நிதி கிடைத்தவுடன் தாமதமின்றி பணிகள் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications