24 ஆயிரம் தெருமுனை பிரச்சாரம் நடத்துங்க.. அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்!
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 24 ஆயிரம் இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தும் பொறுப்பு அண்ணாமலை வசம் வழங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து செயல்பட்டு வருகிறது. இம்முறை பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் டெல்லி தலைமை பிடிவாதமாக உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 25 தொகுதிகளுக்குள் பாஜகவை நிறுத்த வேண்டும் என்று கணக்கு போட்டுள்ளார்.

இதனிடையே பாஜக மொத்தமாக 44 தொகுதிகளை பெற வேண்டும் என்று பணிகளை தொடங்கி இருக்கிறது. அதற்காக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்பாளர் பணி அளிக்கப்பட்டது. அதன்படி காரைக்குடி, மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் தந்தையின் உடல்நிலையை காரணமாக கூறி அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து விலகினார். தொடர்ந்து பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். வியூகமே இல்லாமல் எப்படி அரசியல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதேபோல் அண்ணாமலைக்கு பாஜக சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு மாநிலம் முழுவதும் 24 ஆயிரம் இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவில் சக்தி கேந்திரா என்பது மிகவும் முக்கிய அமைப்பாகும். இந்த அமைப்பு தான் பாஜகவுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபடும். அதேபோல் வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் பணியை மையப்படுத்தி செயல்படும். தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் அண்ணாமலை ஈடுபட இருக்கிறார்.












Click it and Unblock the Notifications