ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஓபிஎஸுடன் பேசிய பின்பே பாஜக முடிவெடுக்கும்.. புகழேந்தி முக்கிய தகவல்!
கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதேபோல் ஓ.பன்னீர் செல்வத்துடன் பேசிய பின்னரே இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக முடிவெடுக்கும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.27ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த இடைத்தேர்தல் அறிவிப்பால், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவிலும் இடைத்தேர்தல் விவகாரம் அனலை கிளப்பியுள்ளது. ஏனென்றால் 2021ம் ஆண்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒன்றாக தேர்தலை சந்தித்த போது, ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023: அதிமுக கூட்டணி வாக்குகளை பங்கு போடுகிறதா அமமுக.. முடிவு நாளை?
அதிமுக - தமாகா கூட்டணி
இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இருந்தும் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, தமாகா வேட்பாளர் யுவராஜாவை விட 8,904 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப இன்று காலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
யாருக்கு ஆதரவு?
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவுக்கு மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு அணிக்கு ஜிகே வாசன் ஆதரவாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு தருணங்களிலும் எடப்பாடி பழனிசாமியை ஜிகே வாசன் சந்தித்துள்ளார். இதனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்களா அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமாகா வெற்றிபெற்றதில்லை
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை. தற்போது மீண்டும் அக்கட்சியிடம் ஈரோடு கிழக்கு தொகுதியை ஒப்படைத்துவிட்டு இடைத்தேர்தலிலிருந்து தப்பிக்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.
எங்களின் ஆயுதம்
கொங்கு மண்டலத்தில் தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமிக்கு, இந்த இடைத்தேர்தல் ஒரு சவால். எடப்பாடி பழனிசாமி தலைமையில் களமிறங்கிய அனைத்து தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றதில்லை. எங்களின் ஆயுதம் பணமில்லை. எங்களின் ஒரே ஆயுதம் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தாங்கள் தயாராக இருக்கிறோம்.
பாஜக நிலைப்பாடு
அதேநேரம் ஒபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக காத்திக்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்திற்கு சொந்தக்காரர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மட்டும் தான். ஓ.பன்னீர் செல்வத்துடன் பேசி தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.