தீபாவளி கூட்டத்தில் நாச வேலைக்கு சதி?.. போலீஸாரை பார்த்தும் காரை வெடிக்க செய்தாரா முபின்!
கோவை: தீபாவளி பண்டிகையின் போது மக்கள் கூடும் இடத்தில் காரை வெடிக்கச் செய்ய சதி திட்டம் தீட்டிய நிலையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் பலியானார்.
பழைய துணி விற்பனையாளரான ஜமேஷா முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், அலுமினியம் பவுடர், கரி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

நள்ளிரவு
ஜமேஷா முபினின் வீட்டின் முன் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபினுடன் 5 பேர் இருந்தது தெரியவந்தது. அவரது வீட்டிலிருந்து ஒரு பொருளை அந்த 5 பேரும் தூக்கிச் சென்று காரில் வைத்ததும் பதிவாகியிருந்தது.

கார் வெடி விபத்து
இந்த கார் வெடி விபத்து குறித்து போலீஸார் தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என காவல் துறை சந்தேகித்துள்ளது.

ஊபா சட்டம்
இந்த 5 பேர் மீதும் ஊபா சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் காவல் துறையினர் விசாரணையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதில் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்படியெனில் காரில் வெடிபொருட்களுடன் வந்த முபின், மக்கள் கூடும் இடத்தில் வெடிக்க சதி திட்டம் தீட்டினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உக்கடம்
உக்கடம் அருகே போலீஸார் காரை வழிமறித்ததை கண்டதும் எங்கே சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் முபின் வெடிப்பொருளை வெடிக்கச் செய்தாரா என்ற சந்தேகமும் காவல்துறைக்கு உள்ளது. அதே வேளையில் காரில் வெடி பொருட்களுடன் யாரோ பயணம் செய்வது போலீஸாருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கார் வெடிப்பு நடந்த சம்பவத்திற்கு 200 மீட்டர் தூரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகள் உள்ளன, மக்கள் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளையும் பட்டாசுகளையும் வாங்க விடிய விடிய குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications