தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கொரோனா பரிசோதனை.. சாலைகளில் கூட்டத்தை குறைக்க போலீசார் புது முயற்சி!
கோவை: கோவையில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,075 பேருக்கு பாதிப்பும், 335 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கொரோனவை தடுப்பதற்காக தமிழகத்தில் 14 நாள்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கை சிலர் கடைபிடிக்க மறுக்கின்றனர்.
மெத்தனமான மக்கள்
அரசுடன், மக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா ஒழியும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிற போதிலும் இவர்கள் காதில் வாங்க்கிக் கொள்வதாக இல்லை. தொடர்ந்து தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
திருந்தாத நபர்கள்
ஒரு சில இடங்களில் போலீசார் கடுமையை காட்டாமல் அன்பாக கொரோனா நிலையை அவர்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில நபர்களை திருத்தவே முடியவில்லை. இப்படிப்பட்ட நபர்களை திருத்துவதற்காக கோவை போலீசார் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்த்துள்ளனர்.
கொரோனா பரிசோதனை
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அத்தியாவசியத் தேவை இன்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு, மாநகராட்சி சார்பில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களை போலீசார் அனுப்பி வருகின்றனர். தேவை இல்லாமல் சுற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
இதனால் தேவையில்லாமல் வெளியே வருபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று போலீசார் கூறுகின்றனர். கோவை போலீசாரின் இந்த புது முயற்சியை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக பாதிப்பு உள்ளது. அங்கு தினமும் 3,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.