பலரது பசி தீர்த்த மாமனிதர் கோவை ‘சாந்தி கியர்ஸ்’ சுப்ரமணியம் காலமானார்
கோவை: குறைந்த விலையில் உணவகம் நடத்தி பலரது பசியை தீர்த்த கோவை சாந்தி கேண்டீன் மற்றும் சாந்தி சோசியல் சர்வீஸ் சேர்மன் சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். 10 ரூபாய்க்கு சாப்பாடும், 5 ரூபாய்க்கு டிபனும் கொடுத்து பல ஆண்டுகள் சேவை செய்தவர் சுப்ரமணியம். இவர் லாப நோக்கம் இன்றி உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை சேவையாக நடத்தியதை நினைவு கூர்ந்து கோவை மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கோவையில் உள்ளவர்கள், கோவைக்கு வந்து சென்றவர்கள் என பலரும் கேள்விப்பட்ட பெயர் என்றால் அது கோவை சாந்தி கியர்ஸ் தான் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனமான இது,உலகளவில் பிரபலமாக நிறுவனமும் கூட.
இந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர் சுப்ரமணியம். இவரது குடும்பத்தில் மனைவி, மற்றும் மகள் மரணம் என அடுத்தடுத்து துயரங்கள் நடந்தது. இதனால் தனிமரமாகி மனஉளைச்சலில் இருந்த சுப்ரமணியம், ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் பங்குகளை விற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
கோவை மக்கள்
அதன்பிறகு தன்னால் ஆன சேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இதன் படி கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்காக உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை லாப நோக்கம் இன்றி சேவை மனப்பான்மையுடன் செய்து வந்தார்.
டிபன் 5 ரூபாய்
அதன் ஒரு பகுதியான சாந்தி கேண்டீன் கோவையில் இன்றும் பிரசித்தி பெற்றது. காலையில் இட்லி, சப்பாத்தி, வடை... உள்ளிட்டவை. ஒவ்வொன்றும் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே. தரத்தில் கொஞ்சமும் சமரசம் செய்யாமல் வழங்கி வந்தார். இதற்கு சைடுடிஷ்ஷாக நான்கு வகை சட்னி ப்ளஸ் சாம்பாரும் கொடுத்து வந்தார்.
13 வகைகள்
இது ஒருபுறம் எனில் மதியம் கூட்டு, பொரியல், வடை, அப்பளம், பழம்... என 13 வகைகளுடன் முதல் தரமான சாப்பாடு. அதுவும் அன்லிமிடெட். விலை? வெறும் ரூ.25. ‘இன்று என்ன ஸ்பெஷல்' என்பதை தினமும் கரும்பலகையில் எழுதி வைத்து வழங்கி வந்தார்
சாப்பிடும் மக்கள்
ஃபில்டர் காபி? வெறும் ரூ.5தான். பண்ணை பசும்பாலில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி... என எது தேவையோ அதை நாமே போட்டுக் கொள்ளலாம். தினமும் காலை, மதியம், இரவு என மொத்தமாக 15 ஆயிரம் பேர் சாந்தி கேண்டீனில் சாப்பிட்டு வருகிறார்கள். கோவையின் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் அதிகம். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குறைந்த விலையில் இங்கு வயிறார சாப்பிட்டு வருகிறார்கள்.
சுப்ரமணியம் காலமானார்
உணவகம் மட்டுமின்றி மருந்தகத்திலும் குறைவான விலையில் மருந்துகளை கொடுத்து வந்தார். மருத்துவமனையும் சேவை மனப்பான்மையுடன் சுப்ரமணியம் நடத்தி வந்தார். இந்நிலையில் பல லட்சம் பேரின் பசியை தீர்ந்த மாமனிதர் சுப்ரமணியம் (78) உடல் நலக்குறைவால் இன்று காலாமானார் அவரது சேவையை நினைவு கூர்ந்து கோவை மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.