கோவை புறநகர் பேருந்து நிலைய அறிவிப்பு எதிரொலி: நிலங்களின் விலை கிடுகிடு!
கோவை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை போல கோவையிலும் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவால் கொங்கு மண்டல வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புறநகர் பகுதிதான் வெள்ளலூர். இங்குதான் ரூ.150 கோடி செலவில் பிரமாண்ட புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இப்போது இதுதான் இப்பகுதி மக்களின் பிரதான பேச்சாக மாறியுள்ளது.
டீக்கடை பேச்சு
வெள்ளலூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் மருதாச்சலம் இதுபற்றி கூறுகையில் "தமிழக அரசின் முடிவால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். வெள்ளலூர் மட்டுமின்றி சுட்டுவட்டாரத்திலுள்ள போத்தனூர், செட்டிப்பாளையம் பகுதிகளிலுள்ள டீக்கடைகளிலும், பெட்டிக்கடைகளிலும் பஸ் நிலையம் வருவது குறித்துதான் பேச்சாக உள்ளது" என்றார் பெருமிதத்துடன்.
ரியல் எஸ்டேட்
பஸ் நிலையம் வரும் அறிவிப்பு வெளியானதுமே, வெள்ளலூரை சுற்றி உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நிலத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் கூட அதை கைவிட்டு காத்திருக்க தொடங்கியுள்ளனர். பஸ் நிலையம் வந்ததும், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் என இந்த பகுதிக்கான தேவை அதிகரித்து நிலத்தின் விலை கிடுகிடுவென கூடும் என்பது அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
குப்பை கிடங்கு
இருப்பினும் இந்த பகுதியிலுள்ள 654 ஏக்கர் பரப்புள்ள குப்பை கொட்டும் இடத்துக்கு மாற்று தேட வேண்டிய கட்டாயம் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றம் பல வியாதிகளை உருவாக்கிவிடும் என்பதால் கோவைக்கு பஸ்சில் வரவே மக்கள் அச்சப்படும் நிலை உருவாகிவிடும் என்று வெள்ளலூர் மக்கள் கூறுகிறார்கள்.
டிராபிக் குறையும்
அவினாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் உக்கடம் பகுதிகளை வெள்ளலூர் பகுதி இணைக்கும் வகையில் அமைந்துள்ளதால், கோவைக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று மாநகராட்சி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருச்சி, மதுரை, பல்லடம், பழனி, பொள்ளாச்சி, சேலம் பயணிகளும், வர்த்தகர்களும், நெரிசல் இல்லாத பயணத்துக்கு இந்த பஸ் நிலையம் உதவும் என்று கூறினர்.