அண்ணன் தம்பியா பழகுறோம்! பந்த்தால் தேவையற்ற பிரச்சினை வரும்! கோவை கமிஷனரிடம் ஜமாஅத் சொன்ன தகவல்?
கோவை : பாஜக அறிவித்துள்ள பந்த் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், தேவையின்றி கோவையில் மத பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதுமே தங்களது கோரிக்கையாக உள்ளது என அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடையடைப்பன்று அனைத்து வணிகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் , கடைகளை அடைக்கக் கோரி வற்புறுத்தப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அன்றைய தினம் அனைத்து பொருட்களும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்திருந்தது.

கோவை பந்த்
இந்த நிலையில் அனைத்து ஜமாத், அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உடன் பேச்சு நடத்தினர். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது."பாஜக அறிவித்த பந்த் என்பது கோவை மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்லாமிய கூட்டமைப்பு
பந்த் சமயத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுள்ளோம்.வருங்காலத்தில் காவல்துறைக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.மதகண்ணோட்டத்தில் இந்த சம்பவத்தை பார்க்க வேண்டாம். எல்லாம் மதத்திலும் ,மதத்தை நம்பாதவர்களும் தவறு செய்கிறார்கள்.

எந்த தவறுமில்லை
ஆனால் இஸ்லாமியர்கள் தவறு செய்யும் போது அதை பல கோணத்தில் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள். இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நாங்கள் உண்மை கண்டறியும் சோதனை குழு ஒன்றை அமைத்தோம். அந்த குழு விசாரித்ததில் கைது செய்யப்பட்ட குற்றவாளியில் ஒருவர் கார் வியாபாரம் செய்பவர்,அவர் வெறும் கார் வியாபாரம் செய்பவர் மட்டுமே, அவர் குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டபடுகிற சூழலில் உள்ளது. இப்படி இருக்க அவர் மீது எந்த தவறுமில்லை என மாநகர காவல் ஆணையரிடம் தெரிவித்துள்ளோம்.

மத பதற்றம்
தேவையில்லாமல் கோவையில் மத பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம்" என்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் கூறியுள்ள நிலையில் திட்டமிட்டபடி கோவையில் பாஜக சார்பில் பந்த் நடைபெறும் என பாஜக நிர்வாகி ஒருவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications