கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியது ஏன்?.. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுகவினர் முற்றுகை
கோவை: கோவை மாநகராட்சி வார்டுகளில் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாக கூறி அமைச்சர் செந்தில்பாலாஜியின் வாகனத்தை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர மாநில தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை துவக்கி வைக்க தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

முற்றுகையிட்ட திமுகவினர்
நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது திமுகவினர் சிலர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மருத்துவமனையில் இருக்கும் மூன்று வாயில்களிலும் திமுகவினர் சூழ்ந்துகொண்டு அமைச்ச ர் செந்தில் பாலாஜியை சந்தித்து பேச காத்திருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

கூட்டணி கட்சிக்கு சீட் வழங்குவது ஏன்?
இதன்பின்புதான் அமைச்சர் செந்தில்பாலாஜி செல்லும் வாகனம் செல்லும் முன்பாக கூடிய திமுகவினர் சொந்த கட்சியினருக்கு அப்பகுதியில் சீட் வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்கியதை கண்டித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். போலீசார் விரைந்து கூட்டத்தை கலைந்து போக செய்தனர். இதையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் ஏதும் சொல்லமல் வாகனத்தில் சட்டென்று புறப்பட்டுச் சென்றார்.

அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை
அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுகவினர் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் கோவை சுகுணா ஆடிட்டோரியத்திலும் திமுகவை சேர்ந்த அதிருப்தியாளர்கள் பெண்கள் உட்பட பலர் கூடியதால் பரபரப்பு உண்டானது.












Click it and Unblock the Notifications